மன்னாாில் உயிாிழந்த அருட்தந்தையின் பூதவுடல் இன்று மாலை நல்லடக்கம்!

மன்னார்- தலைமன்னார் பிரதான வீதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த மன்னார் மடு மாதா சிறிய குருமட உதவி இயக்குனர் அருட்தந்தை ஜொனார்தன் கூஞ்ஞவின் இறுதிக் கிரியைகள் இன்று இடம்பெறவுள்ளன.

மன்னார் மறைமாவட்ட மடுமாதா சிறிய குருமட உதவி இயக்குனர் அருட்தந்தை ஜொனார்தன் கூஞ்ஞ கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு மன்னார்- தலைமன்னார் பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்தார்.

அன்னாரின் பூதவுடல் நேற்று திங்கட்கிழமை பிற்பகல் மன்னார் பொது வைத்தியசாலையில் இருந்து மன்னார் ஆயர் இல்லத்தில் உள்ள சிற்றாலயத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டதையடுத்து, இரவு 7 மணியளவில் ஆன்ம இளைப்பாற்றிக்காக திருப்பலியும் ஒப்புக்கொடுக்கப்பட்டது.

இந்த நிலையில், இன்று ஆயர் இல்ல சிற்றாலயத்தில் காலை 7 மணியளவில் இரங்கல் திருப்பலியைத் தொடர்ந்து காலை 8.15 மணிக்கு அவரின் பூதவுடல் மக்கள் அஞ்சலிக்காக மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்துக்கு எடுத்து வரப்பட்டுள்ளது.

தற்போது பொது மக்கள் தொடர்ச்சியாக அன்னாருக்கு அஞ்சலி செலுத்தி வரும் நிலையில், பிற்பகல் 3 மணிக்கு மன்னார் ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகையின் தலைமையில் கூட்டு இரங்கல் திருப்பலி அன்னாருக்காக ஒப்புக் கொடுக்கப்படவுள்ளது.

இதனைத் தொடர்ந்து இன்று மாலை 5 மணிக்கு பேராலயத்திலிருந்து மன்னார் கத்தோலிக்க மயானத்திற்கு அன்னாரின் பூதவுடல் எடுத்துச் செல்லப்பட்டு 5.45 மணிக்கு நல்லடக்கம் செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *