இரண்டாக பிளந்தது மொட்டு கட்சி – ரணிலுக்கு ஆதரவளிப்பதற்கு தீர்மானித்துள்ள மேலும் பல எம்.பி.க்கள்!

  

திலும் அமுனுகம, அனுப பஸ்குவல், கீதா குமாரசிங்க, அஜித் ராஜபக்ஷ, எஸ்.பி.திஸாநாயக்க, பிரேம்நாத் சி தொலவத்த, காஞ்சன விஜேசேகர உள்ளிட்ட  நாடாளுமன்ற உறுப்பினர்களும்  ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளனர். 

மொட்டு சின்னத்தில் வேட்பாளர் ஒருவர் களமிறக்கப்பட வேண்டும் என நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

எவ்வாறிருப்பினும் அந்த தீர்மானத்துக்கு எதிராக 11 எம்.பி.க்கள் தமது வாக்குகளை அளித்திருந்தனர். 

இந்நிலையில் நேற்று இரவு மேற்குறிப்பிட்ட எம்.பி.க்கள் கொழும்பில் கூடி தமது நிலைப்பாடு தொடர்பில் கலந்தாலோசித்துள்ளனர். 

அதற்கமைய பெரும்பான்மை உறுப்பினர்களின் நிலைப்பாடுகளை ஏற்காமல் பொதுஜன பெரமுன வேட்பாளரைக் களமிறக்குவதற்கு தீர்மானித்துள்ளதால், தாம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்கவுள்ளதாக இவர்கள் தெரிவித்துள்ளனர்.

நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்கவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவு வழங்கப்போவதாக இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன எவ்வாறான தீர்மானத்தை எடுத்திருந்தாலும் சரி, கட்சியின் பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் நான் ஜனாதிபதிக்கு எதிர்வரும் தேர்தலில் ஆதரவளிப்பேன், நாட்டை மிக முக்கியமான தருணத்தில் காப்பாற்றியவர் அவர் என இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *