முல்லைத்தீவு மாவட்டத்தில் 23,930 ஏக்கர் பெரும்போக நெற்செய்கை, கனமழை காரணமாக வெள்ளநீரில் மூழ்கிக் காணப்படுவதாக முல்லைத்தீவு மாவட்ட கமநல அபிவிருத்தித் திணைக்கள உதவி ஆணையாளர் ஆர்.பரணீகரன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்குரிய இழப்பீடுகளை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்குமாறு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற விசேட மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்திலேயே இந்த விடயங்கள் பேசப்பட்டுள்ளன.
அங்கு முல்லைத்தீவு மாவட்ட கமநல அபிவிருத்தித் திணைக்கள உதவி ஆணையாளர் கருத்துத் தெரிவிக்கையில்,
வயல் நிலங்களில் தொடர்ந்தும் வெள்ள நீர் தேங்கியிருக்கின்றதா என்பதை அவதானித்தே, பாதிப்பு நிலமைகள் குறித்து மதிப்பீடு செய்ய முடியும்.
தற்போது மழைவீழ்ச்சி அளவு குறைந்திருப்பதால் வயல் நிலங்களை மூடியிருக்கின்ற வெள்ள நீர் படிப்படியாக குறைவடைகின்றபோது, பாதிப்பு நிலைமைகள் குறையக்கூடுமென நம்புகிறோமெனத் தெரிவித்தார்.
இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கருத்துத் தெரிவிக்கையில்,
விவசாய பாதிப்பு நிலமைகளை மதிப்பீடு செய்வதற்கு குறிப்பிட்டளவு நாட்கள் தேவை என திணைக்கள அதிகாரிகள் கூறுவதை நாம் ஏற்றுக்கொள்கின்றோம்.
ஆனால் கூடிய விரைவில் விவசாய பாதிப்பு நிலமைகளை மதிப்பீடுசெய்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கான இழப்பீடுகளை உடனடியாக வழங்க உரிய திணைக்கள அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டுமெனத் தெரிவித்தார்.