அநுர தலைமையில் சரியான திசையில் பயணிக்கின்றது நாடு – பிரிட்டன் தூதுவர் பாராட்டு!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் நாடு சரியான பொருளாதாரத் திசையில் சென்று கொண்டிருக்கின்றது என இலங்கைக்கான பிரிட்டன் தூதுவர் ஆண்ட்ரூ பற்றிக் தெரிவித்தார்.

அத்துடன் இலங்கையில் வர்த்தக வாய்ப்புக்களை ஆராய்வதற்காக பிரிட்டன் வணிகத் தலைவர்கள் குழு அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் இலங்கைக்கு வருகை தரவுள்ளது என்றும் அவர் கூறினார்.

நிதி அமைச்சில் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெருமவுக்கும் பிரிட்டன் தூதுவருக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்தச் சந்திப்பில் பிரிட்டன் தூதுவர், தற்போதைய பொருளாதார நிலைமை மற்றும் எதிர்காலத் திட்டங்கள் தொடர்பில் ஆழமாகக் கலந்துரையாடினார்.

அரசு ஆட்சியைப் பொறுப்பேற்றதிலிருந்து பொருளாதார ஸ்திரத்தன்மையை அடைவதில் மேற்கொண்ட விரைவான முன்னேற்றத்தையும் அவர் பாராட்டினார்.

இலங்கையின் பொருளாதாரத் திட்டங்கள் குறித்தும், எதிர்கால முன்னெடுப்புக்கள் குறித்தும் பிரதி அமைச்சர் ஹர்ஷன சூரியப்பெரும தெளிவுபடுத்தினார்.

இலங்கைப் பொருட்களின் ஏற்றுமதியை, குறிப்பாக சேதன விவசாயப் பொருட்கள், ஆடைகள், இயற்கை அழகு சாதனப் பொருட்களைப் பிரிட்டன் சந்தைக்கு ஏற்றுமதி செய்வதை அதிகரிப்பதற்கு வாய்ப்புக்களை ஏற்படுத்துவதாகத் தூதுவர் இதன்போது குறிப்பிட்டார்.

அத்துடன், சர்வதேச இறையாண்மை கடன் பத்திரங்களை மறுசீரமைப்பதில் இலங்கையின் முயற்சிகளையும், சர்வதேச நாணய நிதியத் திட்டத்தை திறம்பட செயற்படுத்துவதையும் தூதுவர் வெகுவாகப் பாராட்டினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *