பெற்றோரின் மீது சுமத்தப்பட்டுள்ள பிள்ளைகளின் கல்வி சுமையை அரசு பொறுப்பேற்றுள்ளது – அமைச்சர் சரோஜா

பெற்றோரின் மீது சுமத்தப்பட்டுள்ள பிள்ளைகளின் கல்வி சுமையை அரசாங்கம் பொறுப்பேற்றுள்ளது. நாட்டு மக்களுக்கு நேரடியாக நிவாரணமளிப்பதற்காகவே இம்முறை கல்வி மற்றும் சுகாதார துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது  என மகளிர் மற்றும் சிறுவர் விவகாரங்கள்  அமைச்சர் சரோஜா போல்ராஜ் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று  உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அரச மற்றும் தனியார் சேவையாளர்களுக்கும், பெருந்தோட்ட மக்களுக்கும் சிறந்த முறையில் சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளது. 

கடந்த கால வரவு செலவுத் திட்டத்தில் பாதுகாப்புத்துறைக்கு அதிகளவில்  நிதி ஒதுக்கப்பட்டு ஒரு சில குடும்பத்தினர் மாத்திரமே  சுகபோகமாக வாழ்ந்தார்கள். 

இந்த வரவு செலவுத் திட்டத்தில்  அந்த வழக்கம் நீக்கப்பட்டு, மக்களுக்கு  நேரடியாக நிவாரணமளிக்கும் வகையில்  கல்வி மற்றும் சுகாதார சேவைத்துறைக்கு அதிகளவில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

பிள்ளைகளின் கல்வி மற்றும் பாதுகாப்புக்கும் எதிர்காலத்துக்கும் விசேட திட்டங்கள்  முன்வைக்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும். 

குடும்ப பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு பல்வேறு வழிமுறைகளில்  திட்டங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

சமூக நலன்புரிக்கும், இலவச கல்விக்கும், மகளிர் பாதுகாப்புக்கும் அதிக  நிதி ஒதுக்கீடு  செய்யப்பட்டுள்ளது.

கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் தாய்மார்களின் போசனை  மேம்பாட்டை கருத்திற் கொண்டு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 

திரிபோசா சேவை வழங்கலுக்காக பாரியதொரு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  சுகாதாரத்துக்காக செலவை அரசாங்கம் பொறுப்பேற்றுள்ளது.

கொழும்பு மாவட்டத்தை மாத்திரம் வரையறுத்திருந்த அபிவிருத்தி நாட்டின் சகல நகரம் மற்றும் கிராமங்களுக்கு சென்றடைவதற்கான திட்டங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. 

பொருளாதார சுதந்திரம், சட்டவாட்சி மற்றும் ஜனநாயகம் பாதுகாக்கப்பட்டால் அனைத்து இன மக்களும் சிறந்த முறையில் வாழ்வதற்கான சூழல் ஏற்படும். அரசியலமைப்பினை மாத்திரம் கொண்டு பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *