அரியாலை மயான புதைகுழி குறித்து அரசாங்கம் விசாரணைகளுக்கு ஒத்துழைக்க வேண்டும் – கஜேந்திரகுமார் எம்.பி. கோரிக்கை

அரியாலை சிந்துப் பாத்தி மயானத்தில் சந்தேகத்துக்கிடமான முறையில் மனித எச்சங்கள் வெளிவந்த நிலையில் அது குறித்து யாழ்ப்பாண நீதிமன்றம் கவனம் செலுத்தி இருப்பது வரவேற்கத்தக்க விடயம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். 

அவர் மேலும் தெரிவிக்கையில், குறித்த மயானத்தில் மனித எச்சங்கள் வெளிவந்தமை தொடர்பில் அறிய கிடைத்ததும் நாங்கள் சென்று பார்வையிட்டோம். 

அங்கு காணப்பட்ட எச்சங்களை பார்க்கும்போது எங்கிருந்தோ  கொண்டு வந்து புதைக்கப்பட்ட எச்சங்களாக பாகங்கள் கலக்கப்பட்டவையாக காட்சி தந்தது. 

இந்நிலையில் யாழ்ப்பாண நீதி மன்றம் குறித்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்தி இருப்பது நம்பிக்கை தரும் நிலையில், தேவை ஏற்படின் சர்வதேச தரத்திலான பகுப்பாய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

தற்போதைய அரசாங்கம் யுத்த கால உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைகளை கோர மாட்டோம் உள்ளக விசாரணைகளே இடம்பெறும்  எனக் கூறி வரும்  நிலையில் குறித்த புதைகுழி யுத்த காலத்தில் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட மனித எச்சங்களாக இருக்கலாம் என நாம் சந்தேகிக்கிறோம். 

ஆகவே தற்போதைய அரசாங்கத்திடம்  நாங்கள் கோரிக்கை முன்வைக்கிறோம் குறித்த மனிதப் புதை குழி தொடர்பில் நீதியான நம்பகத்தன்மையான விசாரணைகளை மேற்கொள்வதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *