வருடம் முழுவதும் பெண்கள் தினத்தைக் கொண்டாட வேண்டும்: கிழக்கு மாகாண ஆளுநர் வலியுறுத்து..!

பெண்கள் தினத்தைக் கொண்டாடுவதற்கு ஒரு நாள் போதாது அவர்களைச் சிறப்பிப்பதாயின் வருடம் முழுவதும் பெண்கள் தினத்தை அனுஷ்டித்து அவர்களை மகிமைப்படுத்த வேண்டும் என கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர தெரிவித்தார்.
இந்தச் செய்தியை நான் தமிழிலும் கூறி அதனை தமிழ் பேசுவோரிடத்திலும் கொண்டு சேர்க்க விரும்புகின்றேன் என்றும் அவர் வலியுறுத்தி தொடர்ந்து தமிழில் உரையாற்றினார்.
“நிலையான எதிர்காலத்தை உருவாக்குவதற்காக –வலுவான பெண் வழித்தடமாக இருப்பாள்”  எனும் இவ்வருட சர்வதேச மகளிர் தின தொனிப்பொருளில் அமைந்த இந்த நிகழ்வு திருகோணமலை மாவட்டச் செயலகத்தின் ஏற்பாட்டில் வீ எபெக்ற் நிறுவனத்தின் நிதி அனுசரணையில் இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனத்தின் முழுமையான அமுலாக்கத்துடன் இடம்பெற்றது.
சுமார் 250 பேருக்கு மேற்பட்ட பெண் செயற்பாட்டாளர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வில் தொழில் முனைவோராகத் திகழும் 25 பெண்கள் ஆளுநர், மாவட்டச் செயலாளர், பிரதேச செயலாளர்கள், துறைசார்ந்த அதிகாரிகளால் கௌரவிக்கப்பட்டு சான்றிகழ்களும் நினைவுச் சின்னங்களும் வழங்கி பாராட்டப்பட்டார்கள். 
நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரட்ணசேகர,
தாயாக, சகோதரியாக, மனைவியாக என பல பாத்திரங்களில் இந்த உலகை உயிர்ப்பூட்டும் பெண்களை தினமும் கண்ணியப்படுத்துவதுதான் சரியாக இருக்கும். பெண்களுக்கு உள்ள வளங்கள், அவர்கள் அனுபவிக்கும் வசதி வாய்ப்புக்கள் மிகக் குறைந்த அளவிலேயே உள்ளன. 
பெண்களுக்கு உயர் கண்ணியத்தையும், மதிப்பு, மரியாதையும் வழங்க வேண்டும் என்றால் அதனை நாங்கள் எமது வீட்டிலிருந்தே ஆரம்பிக்க வேண்டும். பின்னர் அது வியாபித்து பாடசாலை, பணியிடம், பள்ளிவாசல், பன்சலை, கோவில், விகாரை, தேவாலயம் என்று அவைகளும் பெண்களைக் கண்ணியப்படுத்தும் இடங்களாக மாற வேண்டும். இதனைத் காலம் தாழ்த்தாது அமுல்படுத்த வேண்டும். 
இன்று இலங்கையில் மட்டுமல்ல முழு உலகத்திலும் பெண்களின் கல்வித் தரம், அவர்களது நிபுணத்துவ மனித வளம் மேம்பட்டிருக்கிறது. இலங்கைப் பல்கலைக் கழகங்களில் சகல பீடங்களிலும் கற்கின்ற மாணவிகளின் எண்ணிக்கை மெச்சிப் பேசுமளவிற்கு அதிகரித்திருக்கிறது. நாட்டின் சனத்தொகையிலும் பெண்கள் 52 வீதம் உள்ளார்கள். 
முன்னர் நாங்கள் இலங்கைக்கு வருமானத்தை ஈட்டித் தருவது தேயிலை, றப்பர், கோப்பி என்றுதான் சொன்னோம். ஆனால் அந்த நிலைமை மாறி இப்பொழுது நாட்டிற்று டொலர் அந்நியச் செலவாணியை ஈட்டித் தருவது நம் நாட்டுப் பெண்களே என்றாகியிருக்கிறது. 
இவ்வாறு பெண்கள் எல்லா வகையிலும் தமது அர்ப்பணிப்பைச் செய்து வருகிறார்கள். நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பு அவர்களே. எனவே அத்தகைய அர்ப்பணிப்பாளர்களை கௌரவிப்பதில் வருடத்தில் ஒரு நாள்  போதாது எனவும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *