நல்லூர் திருவிழாவுக்கு முன் வடக்கு ரயில் சேவையை குறைப்பது பொருத்தமற்றது – அரசிடம் முக்கிய கோரிக்கை

நல்லூர் கந்தசுவாமி ஆலய மகோற்சவத்தை முன்னிட்டு வடக்கிற்கான ரயில் சேவையை குறைக்கும் அரசின் தீர்மானத்தை உடனடியாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளரும் அரசியல் சபை உறுப்பினருமான கீதநாத் காசிலிங்கம் வலியுறுத்தியுள்ளார்.

கொழும்பு – காங்கேசன்துறை (KKS) இடையூர்தி விரைவு ரயில் சேவையை தினசரி இயக்கத்திலிருந்து வாரத்திற்கு நான்கு நாட்களாகக் குறைக்கும் தீர்மானம், ஆண்டுதோறும் நடைபெறும் நல்லூர் கந்தசுவாமி ஆலய மகோற்சவத்தை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள், யாத்திரிகர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் வடக்கிற்கு வரவுள்ள நிலையில் எடுக்கப்பட்டிருப்பது மிகவும் பொருத்தமற்றது என அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், வடக்கு நோக்கிப் பயணிக்கும் மக்கள் நீண்ட காலமாகவே போதிய ரயில் சேவையின்மையாலும், பயணிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்யாத கால அட்டவணையாலும் சிரமங்களை எதிர்கொண்டு வருவதாகவும், இந்தப் பிரச்சினைகள் குறித்து பலமுறை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டிருந்தும் தீர்வு எதுவும் வழங்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மின் இயக்கத் தொகுதிகள் (Power Sets) பற்றாக்குறையே சேவை குறைப்பிற்கான காரணம் எனக் கூறப்படுவது புதிய விடயமல்ல என்றும், ஆண்டின் அதிகபட்ச பயணிகள் வருகை காணப்படும் நல்லூர் திருவிழாவுக்கு முன்னரே அதற்கான தீர்வை அரசு ஏன் ஏற்படுத்தவில்லை என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், இந்தத் தீர்மானம் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டதா அல்லது தனியார் பஸ் உரிமையாளர்களின் நலனுக்கு சாதகமாக எடுக்கப்பட்டதா என்ற நியாயமான சந்தேகம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply