கொழும்பு துறைமுகத்தில் கொள்கலன் ஒன்றுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 420 கிலோகிராம் ‘ஐஸ்’ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் தெமட்டகொட பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், நீதிமன்ற உத்தரவைப் பெற்று மத்திய குற்றப் புலனாய்வுப் பணியக அதிகாரிகள் குறித்த கொள்கலனை சோதனையிட்டுள்ளனர்.
இதன்போது, பெருமளவிலான ‘ஐஸ்’ போதைப்பொருள் அதற்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஆரம்பகட்ட விசாரணைகளில், குறித்த போதைப்பொருள் தொகை பாகிஸ்தானிலிருந்து கொள்கலனில் மறைத்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்டிருக்கலாம் எனத் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள தொழிலதிபரிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், இந்தப் போதைப்பொருள் கடத்தலின் பின்னணியில் உள்ளவர்கள் தொடர்பிலும் விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.




