பாறுக் ஷிஹான்
சாய்ந்தமருது பிரதேச செயலகப் பிரிவுக்குள் இளம் பெண் தொழில் முயற்சியாளர்களை உருவாக்கும் உயரிய நோக்கோடு, எடின்பரோ (Edinborough) நிறுவனத்தின் அனுசரணையுடன் “பல் சுவை வசந்தம்” இலவச சமையற்கலை மற்றும் உணவு பாதுகாப்பு தொடர்பான வழிகாட்டல் செயலமர்வு சனிக்கிழமை (12) பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் சிறப்பாக நடைபெற்றது.
சாய்ந்தமருது பிரதேச செயலக சமுர்த்தி திட்டப் பிரிவின் ஏற்பாட்டில், சமுர்த்தி திட்ட முகாமையாளர் றியாத் ஏ. மஜீத் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வை ஊவா சமூக வானொலி ஒலிபரப்பாளர் றமீஸ் சிறப்பாக நெறிப்படுத்தினார்.
இச்செயலமர்வில் எடின்பரோ நிறுவனத்தின் பிரபல சமையற்கலை நிபுணர் எம். றியாஸ் வளவாளராகக் கலந்துகொண்டு, தற்காலப் போக்குக்கு ஏற்ப நவீன சமையற்கலை நுட்பங்கள் மற்றும் உணவு பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து நேரடி செயல்முறை விளக்கப் பயிற்சிகளை வழங்கினார்.
செயலமர்வின் இறுதிக்கட்டத்தில் பங்குபற்றிய இளம் பெண்களுக்கான விசேட சமையற்கலைப் போட்டியொன்றும் நடாத்தப்பட்டது. இதில் வெற்றிபெற்ற போட்டியாளர்களுக்கு எடின்பரோ நிறுவனத்தினால் பெறுமதிமிக்க பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில் சாய்ந்தமருது பிரதேச செயலக தலைப்பீட சிரேஷ்ட சமுர்த்தி முகாமையாளர் ஏ.சீ.ஏ. நஜீம், சன்றைஸ் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளரும் சமையற்கலை நிபுணருமான ஏ.வி.எம். நளீம், சமுர்த்தி சமூக அபிவிருத்தி உதவியாளர் யூ.எல். ஜஃபர், பிரபல அறிவிப்பாளர் எம்.வி.எம். நிம்சான் உட்பட சமுர்த்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பல இளம் பெண் தொழில் முயற்சியாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.





















