வங்காள விரிகுடாவில் குறைந்த தாழமுக்கம் – மீனவர்களுக்கு எச்சரிக்கை!

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக வட அகலாங்கு 11.9N இற்கும் கிழக்கு நெடுங்கோடு 84.2N இற்கும் இடையில் யாழ்ப்பாணத்திற்கு வடகிழக்காக 520 கிலோ மீற்றர் தூரத்தில் மையம் கொண்டுள்ள தாழமுக்கமானது படிப்படியாக வலுவிழந்து வடமேற்கு திசையில் நகரக்கூடியசாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவயில் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது அடுத்த 24 மணித்தியாலங்களில் பெரும்பாலும் தமிழ்நாடு – பாண்டிச்சேரி கரையோரப் பிரதேசங்களை நோக்கி நகரக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

எனவே, அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு காங்கேசன்துறையிலிருந்து முல்லைத்தீவு மற்றும் தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்பு ஊடாக திருகோணமலை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட ஆழமான மற்றும் ஆழமற்ற கடற்பரப்புகளில் கடற்படை மற்றும் மீனவ சமூகங்களை அவதானமாக இருக்குமாறு அத்திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

மேலும் மேல் மாகாணத்திலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையில் சிறிதளவில் மழை பெய்யும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் எனவும் அத்திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

Leave a Reply