ருஹூணு கல்வி பீடத்தில் மாணவர்கள் மீது தாக்குதல்

காலி அக்மீமன ருஹுணு தேசிய கல்வி பீடத்தில் நேற்று (26) இரவு இடம்பெற்ற மோதலில் காயமடைந்த 14 பேர் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

விஞ்ஞான பீட விடுதியில் தங்கியிருந்து கல்வி கற்கும் மாணவர்கள் குழுவொன்றே இவ்வாறு தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது. குறித்த பீடத்தில் முன்னர் கல்வி பயின்றவர்கள் மற்றும் தற்போது பயிற்சி ஆசிரியர்களாக பாடசாலைகளில் இணைக்கப்பட்டுள்ள குழுவினர் திடீரென விடுதிக்கு வந்து தாக்கியதாக காயமடைந்த மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும், விடுதிக்கு வந்த பயிற்சியாளர்கள், புதிய மாணவர்களின் கைத்தொலைபேசிகளை பெற்றுக்கொண்டு துன்புறுத்த ஆரம்பித்ததாக அங்குள்ள மாணவர்கள் தெரிவித்தனர்.

சுமார் 50 பேர் கொண்ட குழுவொன்று விஞ்ஞான பீடத்தின் வேலியை உடைத்து உள்ளே நுழைந்ததாக ருஹுண விஞ்ஞான பீடத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

இது தொடர்பில் இதுவரை எவ்வித முறைப்பாடும் கிடைக்கப்பெறவில்லை என அக்மீமன பொலிஸார் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *