கொழும்பு, நவ 27
எமது மக்களின் நிலையுணர்ந்து உதவிகளை வழங்கி வருகின்ற சீன அரசாங்கம், தற்போது 90 இலட்சம் லீற்றர் டீசலை வழங்கியுள்ளமை பேருதவியாக எமது மக்களுக்கு அமைந்துள்ளது என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, சீன அரசாங்கத்திற்கும் சீன மக்களுக்கும் இலங்கை அரசாங்கம் மற்றும் மக்கள் சார்பிலான நன்றிகளையும் தெரிவித்துள்ளார்..
முன்பதாக இலங்கைக்கான சீனத் தூதுவர் குய் சென் ஹாங் அவர்களினால் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம், கடற்றொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் சீன அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட டீசல் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.
சீன அரசாங்கத்தினால் இலங்கையில் பொருளாதார ரீதியில் நலிவுற்ற கடற்றொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் என அன்பளிப்பாக வழங்கப்பட்டிருந்த 9,000 மெற்றிக்தொன் டீசலை ஏற்றிய கப்பல் நேற்றையதினம் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்திருந்தது.
இந்நிலையில் இன்றையதினம் அதனை சம்பிரதாயபூர்வமாக வழங்கும் நிகழ்வு கொழும்பு துறைமுகத்தில் இடம்பெற்றதுஃ இதன்போதே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிம் இலங்கைக்கான சீனத் தூதுவர் குய் சென் ஹாங் அவர்களினால் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
இந்நிலையில் கடற்றொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் தேவையான மண்ணெண்ணையை விரைவில் அன்பளிப்பாக வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று சீனத் தூதுவர் உறுதியளித்துள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தற்போது கிடைத்துள்ள 90 இலட்சம் லீற்றர் டீசலில் ஒரு பகுதியை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திடம் கொடுத்து, அவர்களிடம் இருந்து மண்ணெண்ணையை பெற்று, மண்ணெண்ணையைப் பயன்படுத்தும் கடற்றொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் பகிர்ந்தளிக்க எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது