
கொழும்பு- மட்டக்குளி மத்திய வீதி பகுதியில் பட்டப்பகலில் கூறிய ஆயுதங்களினால் 38 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த நபர் கார் ஒன்றிலிருந்து இறங்கிய சந்தர்ப்பத்தில் பின்னால் வந்த காரில் இருந்து இரு நபர்கள் இறங்கி அவர் மீது சரமாரியாக ஆயுதங்களினால் தாக்கியுள்ளனர்.
இதனால் கடுமையான காயங்களுக்கு உள்ளான குறித்த நபர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள போதும் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை, என்றும் போலீசார் தெரிவித்தனர்.
உயிரிழந்த நபர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் பிணையிலிருந்து விடுவிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
குறித்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பையும், பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது.