ஓய்வுபெறும் வயதை குறைக்கும் அமைச்சரவை முடிவை எதிர்த்து வைத்தியர்கள் மனு தாக்கல்

ஓய்வுபெறும் வயதை 60 ஆகக் குறைப்பதற்கு அமைச்சரவை எடுத்த தீர்மானத்தை செல்லுபடியாகாத வகையில் ஆணை பிறப்பிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் பரிசீலித்துள்ளது.

176 சிறப்பு வைத்தியர்கள் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளனர்.

இந்நிலையில், இந்த மனு மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களாக சோபித ராஜகருணா மற்றும் தம்மிக்க கணேபொல ஆகியோரடங்கிய ஆயம் முன் நேற்று அழைக்கப்பட்டது.

இதன்போது, குறித்த மனுவில் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ள அமைச்சரவை, சுகாதார அமைச்சர் மற்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட தரப்பினருக்கு, எதிர்வரும் டிசம்பர் 13 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

60 வயதில் சிறப்பு வைத்தியர்களுக்கு கட்டாய ஓய்வு அளிக்க வேண்டும் என கடந்த ஒக்டோபர் 17ஆம் திகதி கூடிய அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மனுதாரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *