
கடற்றொழில் மற்றும் விவசாய நடவடிக்கைகளுக்கு கணிசமானளவு மண்ணெண்ணை தேவைப்படுகின்றமையினால், மண்ணெண்ணையை அன்பளிப்பாக வழங்குவதற்கும் சீனா முன்வர வேண்டும் என்று அமைச்சர் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு இணக்கம் காணப்பட்டுள்ளது.
கடந்த 27ஆம் திகதி கொழும்பு துறைமுகத்தில் சீனாவிடம் இருந்து வழங்கப்பட்ட 90 இலட்சம் லீற்றர் டீசலை சம்பிரதாயபூர்வமாக பெற்றுக்கொள்ளும் நிகழ்வின் போதே டக்ளஸ் தேவானந்தா இதனை தெரிவித்திருந்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
‘குறித்த தொழில் நடவடிக்கைகளுக்கு மண்ணெண்ணையை அன்பளிப்பாக வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று இலங்கைக்கான சீனத் தூதுவரினால் உறுதியளிக்கப்பட்டுள்ளது.
கடற்றொழில் அமைச்சினால் முன்வைக்கப்பட்ட இக்கோரிக்கையை சாதகமாகப் பரிசீலிப்பதற்கு இலங்கைக்கான சீனத் தூதுவர் குய் சென் ஹாங் உறுதியளித்துள்ளார்.
சீன அரசாங்கம் தற்போது 90 இலட்சம் லீற்றர் டீசலை வழங்கியுள்ளமை எமது மக்களுக்கு பேருதவியாக அமைந்துள்ளது. சீனா வழங்கியுள்ள இந்த உதவிக்காக சீன அரசாங்கத்திற்கும் சீன மக்களுக்கும் இலங்கை அரசாங்கம் மற்றும் மக்கள் சார்பில் நன்றியை தெரிவித்த அமைச்சர் தற்போது கிடைத்துள்ள 90 இலட்சம் லீற்றர் டீசலில் ஒரு பகுதியை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திடம் வழங்கி அவர்களிடம் இருந்து மண்ணெண்ணையைப் பெற்று மண்ணெண்ணெயைப் பயன்படுத்தும் கடற்றொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் பகிர்ந்தளிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும்’ எனவும் குறிப்பிட்டார்.





