உக்ரைன், நேட்டோ அமைப்பின் உறுப்பினராவது உறுதி – நேட்டோ பொதுச்செயலாளர்

அமெரிக்கா, கனடா மற்றும் 28 ஐரோப்பிய நாடுகளை உள்ளடக்கிய உலகின் மிகப்பெரிய ராணுவ கூட்டமைப்பான நேட்டாவில் இணைவதற்கு உக்ரைன் தயாராகி வந்த நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த நாட்டின் மீது ரஷியா போரை தொடங்கியது.

10 மாதங்களை கடந்தும் போர் முடிவில்லாமல் நீண்டு வருகிறது. இந்த போரில் நேட்டோ உறுப்பு நாடுகள் நேரடியாக பங்கேற்வில்லை என்றபோதிலும் உக்ரைனுக்கு ராணுவம், நிதி உள்ளிட்ட உதவிகளை வழங்கி வருகின்றன.

இந்த நிலையில் போரில் ரஷியாவை தோற்கடிக்க உக்ரைனுக்கு கூடுதல் உதவிகளை வழங்குவது குறித்து அமெரிக்க வெளியுறவு மந்திரி ஆண்டனி பிளிங்கன் ருமேனியா தலைநகர் புக்கரெஸ்ட்டில் நேட்டோ உறுப்பு நாடுகளின் வெளியுறவு மந்திரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் நேட்டோ அமைப்பின் பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் கலந்து கொண்டார். கூட்டத்துக்கு பின் அவர் பத்திரிகையாளர்களிடம் பேசுகையில்,

“நேட்டோவின் கதவு திறந்தே இருக்கிறது. இந்த அமைப்பில் சேர விரும்பும் நாடுகளை தடுக்கும் அதிகாரம் ரஷியாவுக்கு இல்லை. உக்ரைனை உறுப்பினராக சேர்ப்பதில் நாங்கள் இப்போதும் உறுதியாக இருக்கிறோம். ஒரு நாள், உக்ரைன் நேட்டோ அமைப்பில் உறுப்பினராகிவிடும். ஆனால் தற்போது போரால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனை ஆதரிப்பதில் முக்கிய கவனம் செலுத்தப்படுகிறது. போரில் உக்ரைன் வெற்றிபெற வேண்டும்” என கூறினார்.

Leave a Reply