இலங்கைக்காக ஐ.எம்.எப் உடன் கலந்துரையாடும் சீனா

தற்போதைய பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க இலங்கைக்கு ஆதரவளிக்க சர்வதேச நாணய நிதியம் மற்றும் பிற சர்வதேச நிதி அமைப்புகளை தொடர்ந்து ஊக்குவித்ததாக சீனா தெரிவித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதான பங்குதாரர் என்ற வகையில், IMF மற்றும் ஏனைய சர்வதேச நிதி நிறுவனங்களை உடனடியாக இலங்கைக்கு ஆதரவளிக்குமாறு சீனா ஊக்குவித்து வருவதாக இலங்கையில் உள்ள சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.

நாட்டின் கடனை மறுசீரமைக்கும் முயற்சியில், இலங்கையின் அனைத்து கடன் வழங்குநர்களின் கூட்டங்களிலும் சீனா தீவிரமாக பங்கேற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் மாதத்தில் சீனாவின் நிதி நிறுவனங்கள் தாமதமின்றி நிதி அமைச்சு மற்றும் இலங்கை மத்திய வங்கியை தொடர்பு கொண்டதாகவும் தூதரகம் குறிப்பிட்டுள்ளது.

பல்வேறு வங்கிகளின் பணிக்குழுக்கள் இலங்கைக்கு விஜயம் செய்து வருவதாகவும், இருதரப்பு பேச்சுவார்த்தைகள் தொடர்வதாகவும் தூதரகம் தெரிவித்துள்ளது

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் விடுத்த கோரிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அண்மையில் பாராளுமன்றத்தில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம், சீனா இலங்கையின் உண்மையான நண்பன் அல்ல என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *