
பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுக்கும் வகையில் இலங்கைக்கு ஆதரவளிக்க சர்வதேச நாணய நிதியம் மற்றும் ஏனைய சர்வதேச நிதி நிறுவனங்கள் தொடர்ச்சியாக ஊக்குவிக்கப்பட வேண்டும் என சீனா தெரிவித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதான பங்குதாரர் என்ற வகையில், IMF மற்றும் ஏனைய சர்வதேச நிதி நிறுவனங்களை இலங்கைக்கு உடனடி ஆதரவை வழங்குமாறு சீனா ஊக்குவிப்பதாக இலங்கைக்கான சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.
மேலும் நாட்டின் கடனை மறுசீரமைப்பதற்காக இலங்கையில் நடைபெறும் அனைத்து கடன் வழங்குனர் சந்திப்புகளிலும் சீனா தீவிரமாக பங்கேற்றதாக தூதரகம் குறிப்பிட்டுள்ளது.
சீன நிதி நிறுவனங்கள் ஏப்ரல் மாதம் தாமதமின்றி நிதி அமைச்சு மற்றும் இலங்கை மத்திய வங்கியுடன் தொடர்புகொண்டதாகவும் தூதரகம் குறிப்பிட்டுள்ளது.
பல்வேறு வங்கிகளின் செயற்குழுக்கள் இலங்கை வந்துள்ளதாகவும் இருதரப்பு கலந்துரையாடல்கள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாகவும் சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சானக்கியன் இராசமாணிக்கம் விடுத்த கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம், சீனா இலங்கையின் உண்மையான நண்பன் அல்ல என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.





