கிளிநொச்சி,டிச 03
கிளிநொச்சி வைத்தியசாலை மற்றும் வைத்தியர்களின் பெயரில் போலி கடிதத்
தலைப்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளமை தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட
வைத்தியசாலையின் பணிப்பாளரால் எழுத்து மூலமான முறைப்பாடு ஒன்று
தங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை பொலீஸார்
தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் தங்களுக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டினை தாம் கிளிநொச்சி
பொலீஸ் நிலையத்திற்கு அனுப்பியுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சி கிருஸ்ணபுரம் தொற்று நோய் வைத்தியசாலையில் இடம்பெற்ற ஊழல்
முறைகேடுகள் தொடர்பில் கணக்காய்வு திணைக்கள் மேற்கொண்ட கணக்காய்வின்
அடிப்படையில் நியமிக்கப்பட்ட ஆரம்ப புலன்விசாரணைக் குழுவானது கிளிநொச்சி
சுகாதார சேவைகள் பணிப்பாளர், அதன் முன்னாள் கணக்காளர், மற்றும் மூன்று
உத்தியோகத்தர்கள் அடங்கலாக ஜவர் மீது குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு
அவர்களுக்கு எதிராக மாதிரி குற்றப் பத்திரம் தயாரிக்கப்பட்டு உரிய
ஒழுக்காற்று அதிகாகரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்து.
இதன் தொடர்ச்சியாக கடந்த மாதம் 14 ஆம் திகதி கிளிநொச்சி சுகாதார சேவைகள்
பணிப்பாளர் மேலதிக விசாரணைகள் முடியும் வரைக்கும் மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்திற்கு தற்காலி இணைப்புச் செய்யப்பட்டிருந்தார். இந்த இணைப்பை கண்டித்து கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை மற்றும் வைத்தியர்களின் பெயர்களில் போலி கடிதத் தலைப்பில் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கைக்கு எதிராகவே கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் பணிப்பாளர் பொலீஸில் முறைப்பாடு செய்திருப்பதாக வைத்தியசாலை பொலீஸார் தெரிவித்துள்ளனர்.