கையடக்க தொலைபேசிகளை கொள்வனவு செய்து மோசடி செய்த கணவன் மனைவி கைது

மட்டக்களப்பு,டிச 03

மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதேசத்தில் கையடக்க தொலைபேசிகளை கொள்வனவு செய்து மோசடியில் ஈடுபட்டு வந்த பொலன்னறுவையைச் சேர்ந்த இளம் கணவன் மனைவியை  இன்று சனிக்கிழமை (3) கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வாழைச்சேனை பிரதேசத்திலுள்ள 7 கையடக்க தொலைபேசி விற்பனை நிலையங்களுக்கு கணவன் மனைவி ஜோடியாக சென்று பெறுமதியான கையடக்க தொலைபேசிகளை கொள்வனவு செய்துகொண்டு அதற்கான பணத்தை இணையவழியாக பணபரிமாற்றம் செய்துள்ளதாக கூறி கையடக்க தொலைபேசியை வாங்கி கொண்டு மோசடியில் ஈடுபட்டுவந்துள்ளனர்.

இந்நிலையில் குறித்த கையடக்க தொலைபேசி நிலையங்களின் வங்கிகணக்குகளில் பணப்பரிமாற்றம் இடம்பெற்றிருக்கவில்லை. இது போலியான பணபரிமாற்றம் என கண்டறிந்ததையடுத்து  பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.
பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் பொலன்னறுவை கட்டின்வில பிரதேசத்தைச் சேர்ந்த 26 மற்றும் 21 வயதுடைய இளம் கணவன் மனைவி கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் மோசடியாக கொள்வனவு செய்த தொலைபேசிகளை பொலன்னறுவை கல்வல பிரதேசத்திலுள்ள அவர்களது உறவினரின் கையடக்க தொலைபேசி நிற்பனை நிலையத்துக்கு வழங்கிவந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள 7 கையடக்க தொலைபேசி விற்பனை நிலையங்களில் இருந்தே கையடக்க தொலைபேசிகளை மோசடி செய்துள்ளதாக கைது செய்யப்பட்ட இவர்களுக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதேவேளை, கல்முனை மூதூர் பிரதேசங்களில் இருந்தும் தொலைபேசி மோசடி தொடர்பில் பலர் முறைப்பாடு தெரிவித்துள்ளனர். இதில் கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணையின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Leave a Reply