அடிப்படை சம்பளம் தொடர்பில் வர்த்தமானி அறிவிப்பு வேண்டும்: செனவிரத்ன

கொழும்பு,டிச 03

தனியார் ஊழியர்களின் அடிப்படைச் சம்பளத்தை 21 ஆயிரமாக அதிகரிப்பதற்கு அனைத்து தரப்பினரும் இணக்கம் தெரிவித்திருந்தபோதும் இதுவரை அது வழங்கப்படுவதில்லை. அது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு வெளிடப்படாமல் இருப்பதே அதற்கு காரணமாகும்.

அதனால் வர்த்தமானி அறிவிப்பை விரைவாக வெளியிட நடவடிக்கை எடுக்கவேண்டும் என முன்னாள் தொழில் அமைச்சர் ஜோன் செனவிரத்ன தெரிவித்தார்.

தொழில் அமைச்சில் கடந்த  காலங்களில் பல்வேறு தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. என்றாலும் அவ்வாறு எடுக்கப்பட்ட தீர்மானங்களில் பல இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. குறிப்பாக தனியார் ஊழியர்களின் அடிப்படைச் சம்பளம் தொடர்பில் தீர்மானம் மேற்கொண்டோம்.

நான் தொழில் அமைச்சராக இருக்கும்போதுதான் 7ஆயிரமாக இருந்த தனியார்ஊழியர்களின் அடிப்படைச் சம்பளத்தை 10ஆயிரமாக மாற்றினோம்.
பின்னர் நிமல் சிறிபாலடி சில்வா அதனை 12ஆயிரத்தி 500ரூபா வரை அதிகரிக்க நடவடிக்கை எடுத்தார் அதன் பிரகாரம் தற்போது தனியார் ஊழியர்களின் அடிப்படைச்சம்பளம் 16ஆயிரம் வரை வழங்கப்படுகின்றது.

என்றாலும் நாட்டின் தற்போதைய வாழ்க்கைச்செலவு மற்றும் பொருளாதார நிலைமையை கருத்திற்காொண்டு தனியார் ஊழியர்களின் அடிப்படைச்சம்பளத்தை 21ஆயிரமாக நிர்ணயிக்க அண்மையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதனை மேற்காெள்ள அனைத்து தரப்பினரும் இணக்கம் தெரிவித்திருந்தனர். ஆனால் அதுதொடர்பான வர்த்தமானி அறிவிப்பு இதுவரை வெளியிடப்படவி்ல்லை.
அதன் காரணமாக 21ஆயிரம் ரூபா அடிப்படைச் சம்பளம் நடைமுறைக்கு வரவில்லை. அதனால் இதுதொடர்பான வர்த்தமானி அறிவிப்பை விரைவாக வெளியிட தொழில் அமைச்சர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன்.

என்றாலும் தொழிற்சங்கங்கள் தனியார் தொழிலாளர்களின் அடிப்படைச்சம்பளத்தை 24ஆயிரம் அல்லது 26ஆயிரமாக அதிகரிக்கவேண்டும் என தெரிவித்து வருகின்றன.
என்றாலும் தற்போது இணக்கப்பாட்டுக்கு வந்திருக்கும் 21ஆயிரத்தை தற்போதைக்கு வர்த்தமானி மூலம் அறிவிக்கவேண்டும் என்றார்.

Leave a Reply