பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் இரு மாத காலத்திற்குள் சமர்ப்பிக்கப்படும்: சுசில்

கொழும்பு,டிச 03

பயங்கரவாத தடை சட்டத்திற்கு பதிலாக பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் இன்னும் இரு மாத காலத்திற்குள் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படும்.

அரசியல் மற்றும் பொருளாதார மறுசீரமைப்புக்கான ஆரம்பக் கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக சபை முதல்வர் சுசில் பிரேமஜயந்த எதிர்க்கட்சிகளின் பிரதம கோலாசான் லக்ஷ்மன் கிரியெல்லவிற்கு பதிலளித்தார்

சபாநாயகர் தலைமையில் சனிக்கிழமை (03) பாராளுமன்ற அமர்வு கூடிய போது நாட்டின் அரசியல் மற்றும் பொருளாதார மறுசீரமைப்பு தொடர்பில் எதிர்க்கட்சிகளின் பிரதம கோலாசான் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
நாட்டு மக்களின் அபிலாசைக்கு முரணாக அரசாங்கம் செயற்படுவதாக குறிப்பிடுவதை ஏற்க முடியாது.போராட்டத்தின் ஊடாக மக்கள் முன்வைத்த கோரிக்கைகள் அரசியலமைப்பின் பிரகாரம் நிறைவேற்றப்பட்டுள்ளன.நாட்டின் அரசியல் மற்றும் பொருளாதார மறுசீரமைப்புக்காக உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

அரசியல் மற்றும் பொருளாதார மறுசீரமைப்புக்காக பாராளுமன்ற மட்டத்தில் அனைத்து அரசியல் கட்சிகளையும் உள்ளடக்கிய வகையில் தேசிய சபை, துறைசார் மேற்பார்வை குழு நியமிக்கப்பட்டுள்ளதுடன்,புதிதாக மூன்று விசேட தெரிவுக் குழுக்களை அமைக்க அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

பொருளாதார மறுசீரமைப்புக்காக நடைமுறையில் இருந்த சட்டங்கள் திருத்தம் செய்யப்பட்டுள்ளன.சமூக கட்டமைப்பிற்கு வலு சேர்க்கும் வகையில் விசேட தேவையுடையவர்களுக்கான சட்டம்,ஜனநாயகத்தை பாதுகாக்கும் சட்டங்கள் காலத்தின் தேவைக்கமைய திருத்தம் செய்யப்படவுள்ளன.
பயங்கரவாத தடை சட்டத்திற்கு பதிலாக பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் இயற்றுவதற்கான சட்டமூலம் இன்னும் இரு மாத காலத்திற்குள் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படும் என்றார்.

Leave a Reply