பொருளாதார மறுசீரமைப்பிற்காக தீர்மானங்கள் எதுவும் இதுவரை அறிவிக்கப்படவில்லை: கிரியெல்ல

கொழும்பு,டிச 03

நாட்டில் பொருளாதாரம் மற்றும் அரசியல் மறுசீரமைப்பு அவசியம் என சர்வதேசம் தொடர்ந்து வலியுறுத்துகின்ற நிலையில் ஆட்சியதிகாரத்தை விட்டு தப்பிச் சென்றவர்கள் மீண்டும் அரசாங்கத்தை அமைத்துள்ளார்கள்.

பொருளாதார மறுசீரமைப்பிற்கான திட்டங்கள் பாராளுமன்றத்திற்கு அறிவிக்காவிடாத நிலையில் எவ்வாறு அத்திட்டங்களுக்கு ஆதரவு வழங்குவது என எதிர்க்கட்சிகளின் பிரதம கோலாசான் லக்ஷ்மன் கிரியெல்ல கேள்வி எழுப்பினார்.

பாராளுமன்றத்தில் சனிக்கிழமை (டிச. 03) விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

நாட்டில் கடந்த மாதங்களில் போராட்டம் தோற்றம் பெற்ற போது இலங்கையில் உள்ள வெளிநாட்டு தூதுவர்களுடன் பேச்சுவார்த்தையை மேற்கொண்ட வேளை ‘  இலங்கையில் ‘அரசியல் மற்றும் பொருளாதார மறுசீரமைப்பு அவசியம் என தூதுவர்கள் வலியுறுத்தினார்கள்.

ஆறு மாத காலத்திற்கு இடைக்கால அரசாங்கத்தை ஸ்தாபித்து,ஆறு மாத காலத்திற்கு பின்னர் தேர்தலை நடத்துவதுடன், அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துமாறு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தொடர்ந்து குறிப்பிட்டார்கள்.
சர்வதேசம் மற்றும் நாட்டு மக்களின் ஆலோசனைகளுக்கு இதுவரை மதிப்பளிக்கப்படவில்லை. அரசாங்கத்தை கைவிட்டு தப்பிச் சென்றவர்கள் தற்போது மீண்டும் அரசாங்கத்தை அமைத்துள்ளார்கள்.
வெளிவிவகாரத்துறை அமைச்சர் அலி சப்ரி, சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரத்தின் நிர்வாகி சமந்தா பவரை அண்மையில் சந்தித்துள்ளார். இதன்போது இலங்கையில் அரசியல் மற்றும் பொருளாதார மறுசீரமைப்பு அவசியம் என சமந்தா பவர் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையில் அரசியல் மற்றும் பொருளாதார மறுசீரமைப்பு  அவசியம் என சர்வதேசம் வலியுறுத்தியுள்ள நிலையில் இதனை கவனத்திற் கொள்ளாமல் அரசாங்கம் வழமை போல் செயல்படுகிறது.

பொருளாதார மறுசீரமைப்பிற்காக அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானங்கள் ஏதும் பாராளுமன்றத்திற்கு இதுவரை அறிவிக்கப்படவில்லை.
சர்வதேச நாணய நிதியத்துடனான ஊழியர் மட்ட இணக்கப்பாட்டு நிபந்தனைகள் ஏதும் வெளிப்படுத்தப்படவில்லை. இவ்வாறான பின்னணியில் எவ்வாறு பொருளாதார மறுசீரமைப்பு திட்டங்களுக்கு நாங்கள் ஒத்துழைப்பு வழங்குவது என்றார்.

Leave a Reply