சுற்றுலா பயணிகளிடம் கப்பம் பெறும் கும்பல் – களமிறங்கிய சிறப்பு பொலிஸ் படையணி

தென் மாகாணத்துக்கு, சுற்றுலா நிமித்தம் செல்லும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளிடம் கப்பம் பெறல் உள்ளிட்ட பல்வேறு சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் குழுக்களைக் கைது செய்ய விஷேட பொலிஸ் படையணியொன்று கடமைக்கு அமர்த்தப்பட்டுள்ளது.

பெந்தோட்டை முதல் கதிர்காம் வரையிலான அனைத்து பொலிஸ் நிலையங்களில் இருந்தும் உள்வாங்கப்பட்ட அதிகாரிகளைக் கொண்டு 600 பேர் கொண்ட இந்த சிறப்பு படையணி உருவாக்கப்பட்டு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.

தென் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹனவின் ஆலோசனைக்கு அமைவாக, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய இந்த வியூகம் வகுப்பட்டு, புதிய பொலிஸ் படையணி கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவித்தன.

தென் மாகாண கடற்கரைகளை வெளிநாட்டு சுற்றுலா பிரயாணிகள் பயன்படுத்தும் போது, அவர்களிடம் பணம் பறிக்கும் கும்பல்கள் செயற்படுவது குறித்து கிடைக்கப் பெற்றுள்ள முறைப்பாடுகளை மையப்படுத்தி இந்த பொலிஸ் படையணி உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply