சிவபூமி அறக்கட்டளையின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பட்டிப்பளை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய வளாகத்தில் அமையவுள்ள திருமந்திர அரண்மனைக்கு (முகலிங்கக்கோவில்) அடிக்கல் நாட்டும் வைபவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை(04) நண்பகல் 12.00 மணியளவில் நடைபெற்றது.
வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணம் நாவற்குழியில் சிவபூமி #திருவாசக அரண்மனை அமைக்கப்பட்டு அதில் திருவாசக பாடல்கள் அனைத்தினையும் (51திருப்பதிகங்களையும்) கருங்கற்களில் கையினால் உளி கொண்டு (செதுக்கி) எழுதி காட்சிப்படுத்தியது போன்று எதிர்காலத்தில் கிழக்கு மாகாணத்தில் கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வர ஆலய வளாகத்தில் சிவபூமி திருமந்திர அரண்மனையில் திருமந்திரத்தில் உள்ள 3000 பாடல்களையும் கருங்கற்களில் கையினால் உளி கொண்டு (செதுக்கி)எழுதி காட்சிப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை யாழ் நாவற்குழி திருவாசக அரண்மனையில் 108 சிவலிங்கங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டதை போன்று கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வர ஆலய வளாகத்தில் அமையவுள்ள திருமந்திர அரண்மனையிலும் 108 சிவலிங்கங்கள் பிரதிஷ்டை செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.











