வட மாகாண கல்வி அமைச்சில் முறைகேடு:ஆளுநர் அலுவலகம் முன்னால் கவனயீர்ப்பு!

நாங்கள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஆளுநரின் செயலகத்துக்கு முன்பாக , இலங்கை ஆசிரியர் சங்கம் ஒரு கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுக்க இருப்பதனை அறிவிக்கும் பொருட்டு இந்த ஊடகவியலாளர் சந்திப்பினை நடாத்துகின்றோம்  என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உப தலைவர் தீபன் திலிசன்  தெரிவித்தார்.

யாழில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

நேற்றைய தினம் எங்களுடைய செயற்குழு கூடி வட மாகாண கல்வி அமைச்சினுடைய நிர்வாக ரீதியான பல முறைகேடுகள் தொடர்பாகவும் ,மிக மோசமான நிர்வாக சீர்கேடுகள் தொடர்பாகவும்,ஒரு ஆளுமை அற்ற நிர்வாக முறைமையினூடாக வட மாகாணத்தின் கல்வி புலத்தை சீரழிப்பது தொடர்பாகவும் மிக நீண்ட கலந்துரையாடலினை மேற்கொண்டு எதிர்வருகின்ற வெள்ளிக்கிழமை இந்த கவனயீர்ப்பு போராட்டத்தினை ஆளுநரின் செயலகத்துக்கு முன்பாக முன்னெடுக்க தீர்மானித்திருக்கிறோம்.

அந்தவகையில் நாங்கள் சுட்டிக்காட்ட விரும்புகின்ற விடயம் என்னவெனில் கடந்த வருடம் டிசம்பர் 29 ஆம் திகதி ஆளுநரிடம் கிட்டதட்ட 100 பக்கங்களைக் கொண்ட  வட மாகாண கல்வித்துறை சார்ந்த முறைகேடுகள் தொடர்பான ஒரு விசாரணை அறிக்கை மூலம் அவர் கேட்டதுக்கிணங்க முறைப்பாடு செய்திருந்தோம்.

எனவே  எதிர்வருகின்ற வெள்ளிக்கிழமை ஆளுநரின் செயலகத்துக்கு முன்பாக ,இலங்கை ஆசிரியர் சங்கம் ஒரு கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுக்க இருப்பதனை தெரிவித்துக்கொள்கிறோம் என தெரிவித்தார்.

Leave a Reply