சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களை இலங்கையில் ஸ்தாபிப்பது தொடர்பில் பாராளுமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிப்பதற்கு குழுவொன்றை நியமிக்குமாறு கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவிடம் ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் சர்வதேச பல்கலைக்கழகங்களின் கிளைகளை நாட்டில் நிறுவுவது தொடர்பான கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சரவை பேச்சாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதற்காக முன்னாள் கல்வி அமைச்சர்கள் மற்றும் உயர்கல்வி அமைச்சர்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
சர்வதேச அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்களை இலங்கையில் நிறுவ அனுமதித்தால், இலங்கையில் இருந்து பெறப்படும் அந்நியச் செலாவணி பெருமளவு சேமிக்கப்படும், இலங்கை மாணவர்கள் மட்டுமல்லாது மாலைதீவு, பங்களாதேஷ், நேபாளம், இந்தோனேசியா போன்ற நாடுகளைச் சேர்ந்த மாணவர்களும் கல்விக்காக இலங்கைக்கு வந்தால் டொலர்களை பெற்றுக்கொள்ளக்கூடிய வழியாகவும் இது அமையும்.