2050ஐ எதிர்கொள்ளும் வகையில் புதிய பொருளாதார முறைமை – ஜனாதிபதி

2050 ஆம் ஆண்டை எதிர்கொள்ளும் வகையில் வலுவான புதிய பொருளாதார முறைமையை அறிமுகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இது நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும் பொருளாதார மறுசீரமைப்புக்கு மேலதிகமான பணி என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற 2022ஆம் ஆண்டுக்கான இலங்கை பொருளாதார மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

பழமையான பொருளாதார முறைமையை கையாள்வதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க முடியாது.

எனவே, இலங்கையின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப முதன்மையான தேவையாக வெளிநாட்டு அந்நியச் செலாவணியே அவசியம் என்று வலியுறுத்தினார்.

மேலும், இலங்கை தற்போது எதிர்நோக்கி வரும் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள வேண்டுமாயின், கடன் மீளச் செலுத்துவதை மறுசீரமைக்க வேண்டும் என்பதுடன், மிகத் திருத்தமான பொருளாதார முறைமையொன்று அறிமுகம் செய்யப்பட வேண்டுமென்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

இந்த நிலைமையிலிருந்து மீள்வதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் ஜனாதிபதி நம்பிக்கை வெளியிட்டார்.

Leave a Reply