300க்கும் மேற்பட்ட பட்டதாரிகள் சிறைச்சாலைக்கு! வெளியான அதிர்ச்சித் தகவல்

கடந்த 2021 ஆம் ஆண்டில் மாத்திரம் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்காக 14,547 குற்றவாளிகளும், 62,426 சந்தேக நபர்களும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் 300க்கும் மேற்பட்டோர் பட்டதாரிகள் என்றும் சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த வருடங்களுடன் ஒப்பிடுகையில், பல்வேறு குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நீதிமன்றங்களால் தண்டனை விதிக்கப்பட்ட அல்லது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்துள்ளதாக சிறைச்சாலைகளின் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

மொத்தமாக 349 பட்டதாரிகளும்(0.5%), உயர்தரம் சித்திபெற்ற 5,395 பேரும் (7%), சாதாரண தரத்தில் சித்திபெற்ற 17,616 பேரும் (22.9%) சிறையிலடைக்கப்பட்டிருப்பதாக சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறையில் அடைக்கப்பட்டவர்களில் 2.2% பேர் பாடசாலைக்கு செல்லாதவர்கள் என்று புள்ளிவிவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

இதனிடையே, சிறைச்சாலை தகவல்களின்படி அவர்களை வயது அடிப்படையில் வகைப்படுத்தும் பட்சத்தில், கடந்த ஆண்டு 16 வயதுக்குட்பட்ட 87 பேரும், 16 முதல் 22 வயதுக்குட்பட்ட 5,983 பேரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், 22-30 வயதுக்குட்பட்ட 18,377 பேரும், 30-40 வயதுக்குட்பட்ட 26,134 பேரும் பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

அவ்வாறே சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்களின் பெரும்பாலனோர்30-40 வயதுக்குட்பட்டவர்களாவர். குறித்த வயது பிரிவுக்குட்பட்ட 26134 பேர் (34.0%) சிறையில் உள்ளனர்.

அதேவேளை, 70 வயதுக்கு மேற்பட்ட 436 கைதிகளும் சிறையில் உள்ளதாக சிறைச்சாலை ஊடகப்பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply