ஆண், பெண் போராளிகளை எங்கள் சமூகம் சரியான கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும். அவர்களை இணைத்து மறுவாழ்வு கொடுக்க வேண்டியது எங்கள் சமூகத்தின் கடமை. அவர்கள் எங்கள் மண்ணிற்காக, மொழிக்காக, எங்களுக்காக போராடினார்கள் என்பதனையும் மறந்து விட கூடாது என சட்டத்தரணி தவராசா தெரிவித்தார்.
இன்று “இனத்துக்காக உழைத்தவர்களை இன்னலின்றி வாழ வைப்போம்” எனும் தொனிப் பொருளில் அங்குரார்ப்பண நிகழ்வு போராளிகள் நலன்புரிச் சங்கம் அங்குரார்ப்பண நிகழ்வு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.
அதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இன்று போராளிகள் நலன்புரிச்சங்க அங்குரார்ப்பண நிகழ்வு நடைபெற்றிருந்தது. இந்த நலன்புரிச் சங்கம் அரசியலுக்கு அப்பாற்பட்டது.
முன்னாள் போராளிகளை பொறுத்தவரையில், 2009ம் ஆண்டு யுத்தம் இடம்பெற்ற பின்பே, இந்த சங்கம் ஆரம்பிக்கப்பட்டிருக்க வேண்டும். அவர்கள் யாருக்காக போராடினார்கள் என எங்கள் சமூகம் புரிந்துகொள்ளவில்லை.
போராளிகள் யாருமே விரும்பி போராடவில்லை. போராட வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டார்கள். தள்ளப்பட்டதனாலேயே போராளிகள் ஆனார்கள். சமூகத்தில் இருப்பவர்கள் தங்களால் முடிந்தளவிலான உதவியினை செய்ய வேண்டும் என்பதே எனது வேண்டுகோள்.
10, 15 வருடங்களுக்கு பின்னரே அவர்கள் விடுதலை செய்யப்பட்டார்கள், விடுதலை செய்யப்பட்டவர்கள் சிறுநீரக நோயினாலும், புற்று நோயினாயினாலும் இறந்தார்கள். எனவே அவர்களின் நோயற்ற வாழ்வு மிக முக்கியமானது.
ஆண், பெண் போராளிகளை எங்கள் சமூகம் சரியான கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும். அவர்களை இணைத்து மறுவாழ்வு கொடுக்க வேண்டியது எங்கள் சமூகத்தின் கடமை என்பதனை நாங்கள் மறந்து விட கூடாது.
எங்கள் மண்ணிற்காக, மொழிக்காக, எங்களுக்காக போராடினார்கள் என்பதனையும் மறந்து விட கூடாது.
ஜனாதிபதியுடனான பேசிச்சுவார்த்தையில் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தன்னிச்சையாக சென்று கலந்துரையாடியிருக்கிறார். இது வரவேற்கத்தக்க விடயம் அல்ல. என்ன பேசுவது என்பது எல்லாருக்கும் தெரிந்திருக்க வேண்டும். அந்த அடிப்படையில் தான் பேச வேண்டும்.
எங்கள் தமிழ் தலைமைத்துவத்தின் பெரிய பலவீனம், பிரிந்து செல்வது தான். நாங்கள் ஒற்றுமையாக ஒரே நோக்கத்திற்காக செயற்பட வேண்டும். ஒரு பேச்சுவார்த்தைக்கு செல்வதாக இருந்தால் என்ன பேச போகிறோம் என்று எங்களுக்குள் ஒற்றுமை இருக்க வேண்டும்.
கால வரையின்றி ஒரு பேச்சுவார்த்தையும் நடத்தப்பட கூடாது. அதில் எந்த பிரயோசனமும் இல்லை. கட்சி வேறுபாடின்றி சமூகம் சார்ந்து, மக்கள் சார்ந்து ஒரு கருத்தோடு ஒருமித்து எங்கள் மக்களுக்கு என்ன தேவை என்பதை கொண்டு செல்வதே காலத்தின் கட்டாயம். காலம் பொன் போன்றது.- என்றார்.