மலையக மக்கள் தேசிய இனமாக அங்கீகரிப்படும் வரை சுதந்திர தினம் மலையக மக்களுக்கும் கருப்பு தினமே-அருட்தந்தை சத்திவேல் கருத்து!

மலையக மக்களும் தேசிய இனமாக அங்கீகரிப்பட்டு அரசியல் கௌரவம் அடையும் வரை சுதந்திர தினம் மலையக மக்களுக்கும் கருப்பு தினமே என மலையக சமூக ஆய்வு மையத்தின் ஆலோசகரான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

மலைய மக்கள் இந்நாட்டில் தங்களின் 200 வருட வரலாற்று வாழ்க்கையில் சிதைக்கப்பட்டவர்களாகவும், பல்வேறு விதமான திட்டமிட்ட ஒடுக்குதலுக்கு முகம் கொடுத்த மக்களாகவும் மட்டுமல்ல சலனமற்ற இன அழிப்பிற்கும் முகம் கொடுக்கின்றவர்களாகவும் அரசியலுக்கு தூரமாக்கப்பட்டவர்களாகவும் வைக்கப்பட்டுள்ள நிலையில் 2021ஆம் ஆண்டு நவம்பர் மாதம் உலகின் நவீன அடிமை தனம் தொடர்பில் ஆறுவதற்காக இலங்கை வந்த ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் பிரதிநிதி டொமொயா ஒபக்டா அவர்கள் “மலையக மக்கள் தமிழர்கள் என்பதற்காகவும், தொழிலாளர் என்பதற்காகவும் அடிமைத்தனத்திற்கு உட்பட்டு இருக்கின்றனர்” என இலங்கையிலிருந்தே கூறியதோடு 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஐநா மனித உரிமை பேரவையில் அறிக்கை சமர்ப்பித்திருக்கின்றார்.

இத்தகைய கால சூழ்நிலையில் மலையக மக்களை நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் செய்யும் உறுப்பினர்கள் மட்டுமல்ல அவர்களின்  வாக்குகளால் நாடாளுமன்ற உறுப்பினர்களானவர்களும்  75 வது சுதந்திர தினத்தில் கலந்து கொள்ளாது சுதந்திரமற்ற மலைய மக்களின் ஆதங்கங்களையும் எதிர்ப்புகளையும் வெளி காட்ட வேண்டும் என மலையக மக்களின் மாண்பினை பாதுகாக்கும் அமைப்பு கோரிக்கை விடுக்கின்றது.

அதே நேரம் வடகிழக்கு தமிழ் மக்கள் சுதந்திர தினத்தை கரி நாளாக அறிவித்து வடக்கில் இருந்து கிழக்கு நோக்கி பாரிய மக்கள் பேரணியும் நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளனர்.

நாட்டின் பொருளாதார கொள்கையாலும், அரசியல் வாதிகளின் மக்கள் சொத்து கொள்ளை காரணமாகவும் வறுமைக்கும் தள்ளப்பட்ட மக்கள் கொழும்பு தலைநகரம்  உட்பட நாட்டின் ஏனைய பிரதேசங்களிலும் சுதந்திர தினத்தினை கருப்பு நாளாக அறிவித்து அமைதி போராட்டங்களையும் ஆயத்தப்படுத்தியுள்ளனர்.

இத்தகைய சமூக அரசியல் பின்னணியில் மக்கள் நேசிக்கும் எவரும் சுதந்திர தின கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள மாட்டார்கள். இனப்படுகொலை, தொடர் இன அழிப்பு என்பவற்றை சந்தித்து வரும் வடகிழக்கு மற்றும் மலையக மக்கள் சார்ந்த அரசியல் தலைமைகள் சுதந்திர தின கொண்டாட்டத்தில் பங்கேற்க கூடாது என்பதே மக்களுடைய வேண்டுகோள்.

சுதந்திர இலங்கையில் முதலாவது நாடாளுமன்றத்திலேயே மலையக மக்களின் சுதந்திரத்திற்கு  வாழ்விற்கு ஆப்பு வைக்கப்பட்டது. அவர்களுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட வாக்குரிமை சட்டம், தொடர்ந்து கொண்டு வரப்பட்ட  பிரஜா உரிமை சட்டம் காரணமாக உழைத்து உரமான  நாட்டில் அண்ணியர்களாக்கப்பட்டனர்.தொடர்ந்து இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் காரணமாக பாரிய மனித உரிமை மீறலுக்கும் உட்பட்டனர். இதுவும் இன அழிப்பின் முகங்களே.

அத்தோடு 1922 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட காணி உச்சவரம்பு சட்டத்தின் கீழ் பெருந் தோட்டங்கள் அரசு டையாக்கப்பட்டபோது கிராமங்களை அண்டிய தோட்டங்களில் இருந்தோர் பலவந்தமாக தோட்டங்களை விட்டு துரத்தப்பட்டனர். பாதுகாக்கப்பட்ட சூழ்நிலையில் அடையாளங்களை இழந்து அடையாளங்களை மறைத்து இன்றும்  வாழ்வதைக் காணலாம்.

அதனைத் தொடர்ந்து பொருளாதார சீர்திருத்தம் என உருவாக்கப்பட்ட பஞ்சம் காரணமாக மலையக பெருந்தோட்ட தொழிலாளர்கள் பலவந்தமாக வறுமைக்குள் தள்ளப்பட்டதோடு; நூற்றுக்கணக்கானோர் பசியின் காரணமாக வீதிகளில் வீழ்ந்து இறந்தனர்.

மலையக பிரதேசத்தில் வாழும் சூழ்நிலையை இல்லாத காரணமாக வடகிழக்கு இடம்பெயர்ந்தோர் இன்றும் அரசியல் அனாதைகள் ஆகியுள்ளனர்.இவர்களில் யுத்தம் காரணமாக பாதுகாப்பு தேடி இந்தியாவிற்கு சென்றோர் முகாம்களில் வாழ்க்கை நடத்துகின்றனர்.

இவை எல்லாவற்றிற்கும் மேலாக 1987 ஆம் ஆண்டு நாட்டின் நிர்வாகம், அபிவிருத்தி என்பவற்றை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்ட  உள்ளூராட்சி மன்றங்களின் சேவைகளையும் அதன்மூலம் பெற்றுக் கொள்ளக் கூடிய அபிவிருத்தி செயற்பாடுகளையும் அடைய முடியாத அளவிற்கு அதன் சட்டங்கள் மலையகப் பெருந்தோட்ட மக்களுக்கு எதிராக உள்ளது.

இவ்வாறு கொண்டுவரப்பட்ட சட்டங்கள் 1889 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட இந்திய தொழிலாளர் சட்டத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது. மலையக பெருந்தொட்ட மக்கள் தனியார் நிலங்களில் வாழுகின்ற மக்களாக இன்றும் கணிக்கப்படுவதே இதற்கு காரணமாகும். இவர்களுடைய வாக்குகள் தேவையாக இருக்கின்றது. ஆனால் இவர்கள் வாழும் பிரதேசம் அபிவிருத்தி அடையக் கூடாது,அரச நிர்வாக சேவைகளை இலகுவில் பெற்றுக் கொள்ளக் கூடாது என்பதே பேரினவாதிகளின் நோக்கமாகும்.

இந்த சட்டங்கள் திருத்தப்பட்டு மலையக மக்கள் இந்நாட்டில் வாழும் இன்னொரு தேசிய இனமாக அங்கீகரிப்பட்டு அரசியல் கௌரவம் அடையும் வரை சுதந்திர தினம் மலையக மக்களுக்கும் கருப்பு தினமே என அவர் தெரிவித்தார்.

Leave a Reply