காணிகள் விடுவிக்கப்பட்டுள்ள போதும் எங்களுக்கு எந்த வாழ்வாதாரமும் இல்லை, சந்தோஷமும் இல்லை! பலாலி மக்கள் கவலை

பலாலியில் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ள போதும் எங்களுக்கு எந்த வாழ்வாதாரமும் இல்லை, சந்தோஷமும்  இல்லை என்றும் தாங்கள் தொடர்ந்தும் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருவதாக பலாலி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இவ்விடயம் குறித்து பலாலி வடக்கு வசாணி பகுதியை சேர்ந்த தேவமலர் என்ற பெண் கருத்து தெரிவிக்கையில்,

அண்மைய நாட்களாக பலாலி பகுதியில் விடுவிக்கப்பட்ட காணிகள் தொடர்பான செய்திகளை நீங்கள் அதிகம் பார்த்திருப்பீர்கள். 1990 ஆண்டு யுத்தம் காரணமாக தனது தாய் இடம் பெயர்ந்து சென்றனர்.  

ஆனால் நாங்கள் இங்கே பிறக்கவில்லை. எங்கள் சொந்த நிலத்தை இப்போது தான் நாங்கள்  பார்க்கின்றோம். 

இங்கு இருந்து இடம் பெயர்ந்த பின்னர் எவ்வளவு துன்பங்களை அனுபவித்தோம். தற்போதும் அனுபவித்து வருகிறோம். எந்த ஒரு அடிப்படை வசதியும் இல்லாத முகாம்களில் தங்க வைக்கப்பட்டோம்.

ஒழுங்கான மலசல கூடம் இல்லை. கிணறு இல்லை, முகாம்களின் அருகில் வசிக்கும் மக்களின் வீடுகளில்  அவற்றுக்காக சென்றோம். 

தற்போது கூட இங்கு மலசல கூட வசதி, நீர் வசதி மின் வசதி, இல்லாமல் கடற்கரைகளில் நாங்கள் எமது தேவையை பூர்த்தி செய்கிறோம்.

காணிகளை விடுவித்தது எமக்கு மகிழ்ச்சிதான். ஆனால் இன்னும் பல இடங்கள் விடுவிக்க வேண்டியுள்ளது. அந்த மக்களின் சந்தோசங்களையும் நாங்கள் பார்க்க வேண்டும்.

தற்போது காணிகளை விட்டும் எங்களுக்கு எந்த வாழ்வாதாரமும் இல்லை. வீடு சீரமைப்பதாக இருந்தாலும் காணி துப்பரவாக்குவது என்றாலும் நீங்கள் வழங்கும் பணம் போதுமானதாக இல்லை.

இந்த கடற்கரையின் வருமானத்தை நம்பியே நாங்கள் வாழ்கிறோம். எனவே விரைவில் எங்கள் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்பக்கூடிய உதவிகளையும் மலசல கூட வசதி, நீர் வசதி, மின்சார வசதிகளையும் மேற்கொண்டு தருமாறு அவர் கோரிக்கை விடுத்தார்.

பலாலி காணி விடுவிப்பதற்காக தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வரும் மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் (மெசிடோ) பணிப்பாளர் ஜாட்சன் பிகிறாடோ தெரிவிக்கையில்,

இந்த காணி விடுவிப்பில் மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். பல ஆயிரக்கணக்கான ஏக்கரில் வெறும் 109 ஏக்கர் காணிகளே விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆனால் இங்கு வெறும் 80 ஏக்கர் காணிகளே கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

2500 ஏக்கர் காணிகள் உள்ள இடத்தில் வெறுமனே 80 ஏக்கர் விடுவிக்கப்பட்டுள்ளது. காணிகள் தற்போது விடுவிக்கப்பட்ட மக்கள் புன்னகைத்தாலும் அவர்களுக்கு முன் பெரியதொரு போராட்டம் உள்ளது.

கடந்த 30 வருடங்கள் போராட்டம் காரணமாக உள்நாட்டுக்குள் இடம் பெயர்ந்த மக்கள் எந்த ஒரு பொருளாதார வாய்பும் இல்லாத வறுமையில் வாடுகின்ற மக்களுக்கு அரசாங்கம் காணிகளை விடுவித்துள்ளது.

வெறும் காணிகளை மாத்திரம் வழங்கி அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது. அதனால் அவர்களுக்கு வீடுகள் உடனே கட்டிக் கொடுக்கப்பட வேண்டும் என்பதுடன் அவர்களுக்கு வாழ்வாதார தொழில் முயற்சிக்கான உதவிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

அது மட்டும் அல்லாமல் இப்பகுதியில் மேலும் 2500 ஏக்கருக்கு மேற்பட்ட காணிகள் இந்த அரசாங்கம் விடுவிக்க வேண்டியுள்ளது.

 எனவே உள்நாட்டில் மக்கள் காணிகள் இல்லாது இருப்பது கொடுமையான விடயம். எனவே இம் முறை ஜெனிவா அமர்வுக்கு முன்னதாக இந்த அரசாங்கம் உள்நாட்டு மற்றும் சர்வதேச சட்டங்களுக்கு அமைவாக காணிகளை விடுவிக்க வேண்டும்.

நாங்கள் தொடர் போராட்டங்களை மேற்கொண்டதன் அடிப்படையில் இந்த காணி விடுவிப்புபை பார்க்கிறோம். 

ஆனால் வெறுமனே இந்த 109 ஏக்கர் காணி விடுவிப்பில் நாங்கள் திருப்தி கொள்ளவில்லை. 2009 யுத்தம் முடிந்து விட்டது.

யாருக்கு பாதுகாப்பு மக்களின் காணிகளில் உணவகங்கள் கட்டுவதற்கும், விடுதிகள் கட்டுவதற்கும், தென்னந்தோப்பு வைப்பதற்கும் உல்லாச வாழ்க்கை வாழ்வதற்குமா? இந்த மக்களின் காணி.

எனவே மக்களின் காணிகள் அனைத்து விரைவில் விடுவிக்கப்பட வேண்டும் என சிவில் சமூக அமைப்புகள் சார்பாக  கேட்டுக் கொள்வதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply