அதிபர் ஆசியர்களுக்கான சம்பள உயர்வு என்பது எட்டாத கனியாகவே காணப்படுவதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்க வலிகாமம் வலய செயலாளர் துரைராசா ஜீவானந்தம் தெரிவித்துள்ளார்.
இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் ஊடக சந்திப்பு நேற்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றபோதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.
கடந்த மூன்று வருடங்களாக எந்த விதமான சம்பள உயர்வுகளும் வழங்கப்படவில்லை என்றும் ஆனால் அரசாங்கம் தொடர்ச்சியாக பொருட்களின் விலைகளை அதிகரித்து வருவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
அத்துடன் பாடசாலைகளின் பல்வேறு தேவைகளை பெற்றோர்கள் சுமக்கவேண்டிய நிலைக்கு தற்போது தள்ளப்பட்டுள்ளதாக ஜீவானந்தம் குறிப்பிட்டுள்ளார்.
பாடசலைக்கான கற்றல் உபகரணங்களை பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் மாணவர்கள் சிரமப்படுவதாகவும் எனவே அனைவரும் ஒன்றிணைந்து கல்வி கட்டமைப்பை பாதுகாக்கவேண்டும் என்றும் ஜீவானந்தம் வலியுறுத்தியுள்ளார்.