வடக்கு கடற்பகுதியை இந்திய மீனவர்களுக்கு குத்தகைக்கு வழங்குவதை கண்டித்து எதிர்ப்பு போராட்டத்திற்கு அழைப்பு.!SamugamMedia

வடக்கு கடல் பகுதியில் வரி அறவீடு செய்து இந்திய மீனவர்களுக்கு வாரத்தில் மூன்று நாட்களுக்கு குத்தகைக்கு வாங்குவது தொடர்பாகவும், இந்திய மீனவர்களின் தொடர்ச்சியாக இலங்கை கடல் பகுதியில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபடுவதை கண்டித்து வடக்கு மாகாண மீனவர்கள் ஒன்றிணைந்து எதிர்வரும் 23ம் திகதி வியாழக்கிழமை காலை மாபெரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை  மன்னார் மாவட்டத்தில்  முன்னெடுக்கவுள்ளனர்.

இவ்விடயம் தொடர்பாக மன்னாரில் இன்று திங்கட்கிழமை(20) காலை ஊடக சந்திப்பு இடம் பெற்றது.

குறித்த ஊடக சந்திப்பில் மன்னார் மாவட்ட மீனவ கூட்டுறவு சங்க சமாச செயலாளர்  என்.எம்.ஆலம் , மன்னார் மாவட்ட கிராமிய  சம்மேளனத் தலைவர் ஜஸ்ரின் சொய்சா, மீனவ சமூகம் சார்பாக அன்ரனி சங்கர் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது அவர்கள் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

குறித்த  ஆர்ப்பாட்டத்திற்கு வர்த்தகர்கள் , சிவில் சமூக அமைப்புகள்,தனியார் போக்குவரத்து சங்கங்கள், விவசாயிகள் என அனைவரும் ஒத்துழைப்பு வழங்குமாறு   ஏற்பாட்டுக் குழு சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.

இந்திய மீனவர்களின் வருகையை,   இந்திய மீனவர்களுக்கு வரி அறவிட்டு மூன்று தினங்கள் இலங்கை கடற்பரப்பில் தொழில் செய்வதற்கு அனுமதி வழங்குவதை  பரிசீலிப்பதாக கடந்த 22- 2- 2023 அன்று நாடாளுமன்றத்தில் வெளிவிவகார அமைச்சரால் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மன்னார் மாவட்டம் மற்றும் வட மாகாணம் தழுவிய மீனவர்களும் மீனவ சமாசங்களும் தங்களுடைய கடும் எதிர்ப்பை  தெரிவித்து வருகின்றனர்.

அதற்கு அப்பால் இந்த தீர்மான யோசனை யை நாடாளுமன்றத்தில் உடனடியாக நிராகரித்த குறிப்பாக வடமாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களின் உரையையும் நாங்கள் வரவேற்கிறோம்.

அதற்கு அப்பால் இந்த விடயத்தை அரசு  பரிசினை கூட செய்யாமல் உடனடியாக இதனை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தியும், இலங்கை இந்திய பேச்சு வார்த்தை மீனவர்களின் என்பதை கடந்த  2016 இல் எடுத்துக் கொள்ளப்பட்ட நடைமுறைக்கு இணங்க பேச்சுவார்த்தை நடைபெற வேண்டும் என்பதை வலியுறுத்தி எதிர்வரும் 23ஆம்  திகதி  இந்த ஆர்ப்பாட்டமானது மன்னார்    பொது விளையாட்டு மைதானத்தில் ஆரம்பிக்கப்பட்டு மன்னார் மருத்துவ மனையின் பிரதான பாதையூடாக சென்று மன்னார் புதிய பேருந்து நிலையத்தில் இறுதி நிகழ்வுகள் நடைபெற உள்ளது.

இதற்கு அமைவாக வடபகுதியில் இருக்கும் பொது அமைப்புக்கள் , மீனவ சங்கங்கள் , ஏனைய சிவில் சமூகங்கள் அனைத்தும் எம்மோடு  இணைந்து இந்த விடயத்திற்கு ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

மேலும்  இது மீனவர்கள் சார்ந்த பிரச்சனைகள் மட்டுமல்ல. வடமாகாணத்தில்  வாழ்கின்ற அனைவரின் பிரச்சினையாக இருக்கிறது.

இன்று வட பகுதியில் நடைபெறும் இந்த பிரச்சினை எதிர்காலத்தில் இலங்கை முழுவதையும் அவர்கள் ஆக்கிரமிப்பார்கள் என்பதை இங்கு நாங்கள் பதிவு செய்கிறோம்.

எனவே அன்றைய தினம் அனைவரும் முழுமையாக கடல் தொழிலை நிறுத்தி வர்த்தக நிலையங்களை மூடி ஒத்துழைப்பு தருமாறு நாங்கள் கேட்டுக் கொள்கிறோம். இதற்கான உத்தியோகபூர்வ கடிதங்களை அந்தந்த அமைப்புகளுக்கும் சங்கங்களுக்கும் நாங்கள் விரைவில் அனுப்ப இருக்கிறோம்.

இதற்கு அப்பால் நாங்கள் ஒன்றைக் கூறுகிறோம்.. இலங்கை அரசு இந்திய அரசும் தாங்கள் எதிர் காலத்தில் மேற்கொள்ள இருக்கின்ற  அபிவிருத்திக்காக நாட்டின் தேசிய வளங்களை யாருக்கும் கையளிப்பதற்கு அனுமதிக்க முடியாது .

அந்த செயல்பாடு மூலம்  எமது மீனவ சமூகத்தை வறுமைக் கோட்டிற்குள் தள்ளுவதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என தெரிவித்தனர்.

Leave a Reply