இன்றைய நவீன உலகின் சவால்களை எதிர்கொள்ள ஆங்கிலக் கல்வி இன்றியமையாதது – கல்முனை மாநகர முன்னாள் முதல்வர்! SamugamMedia

இன்றைய நவீன உலகின் சவால்களை எதிர்கொள்ள ஆங்கிலக் கல்வி இன்றியமையாதது    என்று கல்முனை மாநகர முன்னாள் முதல்வரும் மெற்றோ பொலிட்டன் கல்லூரியின் தவிசாளரும்,ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உச்சபீட உறுப்பினருமான கலாநிதி சிராஸ் மீராசாஹிப் பெற்றோர்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.

சாய்ந்தமருதில் சுமார் 09 வருடங்களுக்கு மேலாக இயங்கி வரும்  லீட் த வே முன்பள்ளி பாடசாலையின் வருடாந்த பட்டமளிப்பு,சான்றிதழ் வழங்கும் நிகழ்வு மற்றும் மாணவர்களின் கலை நிகழ்வும்  (21) செவ்வாய்கிழமை சாய்ந்தமருது லீ மெரிடியன் வரவேற்பு மண்டபத்தில் அதன் பணிப்பாளர் ஐ.எம்.உவைஸ் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கல்முனை மாநகர முன்னாள் முதல்வரும் மெற்றோ பொலிட்டன் கல்லூரியின் தவிசாளரும் ,ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உச்சபீட உறுப்பினருமான கலாநிதி சிராஸ் மீராசாஹிப் கலந்து கொண்டு உரையாற்று கையில் இவ்வாறு தெரிவித்தார் 

மேலும் அங்கு அவர் உரையாற்றுகையில்…

பெற்றோர்களே  உங்களது பிள்ளைகளுக்கு ஆங்கிலக் கல்வியை எப்படியாவது கற்றுக்கொள்வதற்கு வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுங்கள்.அத்துடன் சிங்களத்தையும் சேர்த்து கற்றுக்கொடுங்கள் அப்போதுதான் நிச்சயமாக உங்களது பிள்ளை சமூகத்தில் முன்னணியில் நின்று வெற்றிபெறும்.  

இந்த முன்பள்ளி பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் மும்மொழியிலும் நன்றாக அமைந்திருந்தது. இவர்களைப் பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கு நன்றிகள். 

கல்முனை மாநகர முதல்வராக நான் இருந்த காலத்தில் பாலர் பாடசாலைகளுக்கு நிறைய உதவிகளை வழங்கி இருக்கின்றேன்.

அதேபோன்று இரண்டு முன்பள்ளி பாலர் பாடசாலைகளை மாநகர சபையினால் பாரமெடுத்து நடாத்தியும் இருந்தோம்.

பெற்றோர்கள் பிள்ளைகளை மிகக்

கவனமாக வளர்த்துக் கொள்ளுங்கள் இன்று எமது பகுதிகளில் காணப்படும் போதை போன்ற கெட்ட விடயங்களிலிருந்து எமது பிள்ளைகளைப் பாதுகாத்து நாட்டின் நற் பிரஜைகளாக வளர்வதற்கு உறுதுனையாக இருந்துகொள்ளுங்கள்.

இன்று எமது மக்களுக்கு ஏற்பட்டுள்ள இந்த கஸ்டமான பொருளாதர சூழ்நிலை அகன்று நாட்டு மக்கள் எல்லோரும் சந்தோசமாக வாழ வழிபிறக்க 

பிராத்திக்கிறேன் என்றார்.

 இந்நிகழ்வில், விசேட அதிதிகளாக தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் எம்.முஹம்மட் சிராஜ், கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினரும் சட்டத்தரணியுமான ஆயிஸா சித்திக்கா, சாய்ந்தமருது பிரதேசசெயலகத்தின்  அபிவிருத்தி உத்தியோகத்தர் வை.திருப்பதி, கல்முனை பிரதேச செயலக முன்பள்ளி அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எம்.ஆயிஸா மற்றும் வெளிக்கள உத்தியோகத்தர் அஸ்ஷேக் ஐ. எல்.எம்.அனீஸ், இக்கல்லூரியின் அதிபர்  எம்.பாத்திமா பர்ஸானா மற்றும் மாணவர்களின் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்

இந்நிகழ்வில் மாணவர்களின் கலை நிகழ்வுகளும்   பொல்லடி  கிராமிய கலை நிகழ்வுகளும் சிறப்பாக அமைந்திருந்ததுடன் முன்பள்ளி பாடசாலை மாணவர்களுக்குச் சான்றிதழ் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply