பாடசாலைகளை அத்தியாவசிய சேவையாக மாற்றுவதற்கான சட்டமூலம் கொண்டுவரப்படும் – எச்சரித்த ஜனாதிபதி SamugamMedia

பாடசாலைகளின் பிரச்சனைகளை கலந்துரையாடல் மூலம் விரைவில் தீர்க்காவிட்டால் பாடசாலைகளை அத்தியாவசிய சேவையாக மாற்றுவதற்கான சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க நேரிடும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நாட்டில் மாணவர்களை பல்வேறு குழுக்களின் பணயக் கைதிகளாக வைத்திருக்க இடமளிக்கமுடியாது என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

பாடசாலை துறையில் நிலவும் பிரச்சினைகளுக்கு கலந்துரையாடல் மூலம் விரைவில் தீர்வு காண முடியும் என்றும் ரணில் விக்ரமசிங்க நம்பிக்கை வெளியிட்டிருந்தார்.

கொழும்பு சங்கமித்தா மகளிர் கல்லூரியில் இன்று பாடசாலை மாணவர்களுக்கு இலவச பாடப்புத்தகங்கள் மற்றும் சீருடைத் துணிகள் வழங்கும் தேசிய நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இவ்வாறு தெரிவித்திருந்தார்.

கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த், பதில் கல்விச் செயலாளர் ஹேமந்த பிரேமதிலக மற்றும் சங்கமித்தா மகளிர் கல்லூரியின் அதிபர் துசாரி டி சில்வா ஆகியோர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு நினைவுப் பரிசு ஒன்றையும் வழங்கி வைத்திருந்தனர்.

2023 ஆம் ஆண்டிற்கான பாடசாலை சீருடை துணிகளில் 70 சதவீதமானவை சீன அரசாங்கத்திடம் இருந்து நன்கொடையாக கிடைத்துள்ளதுடன், அவை அனைத்தும் தற்போது நாடு முழுவதும் விநியோகிக்கப்பட்டுள்ளன. 

உள்நாட்டு வர்த்தகர்களால் எஞ்சிய சீருடை துணிகள் வழங்கப்படுகின்றன. இந்தியக் கடன் உதவியின் கீழ் மூலப் பொருட்களைப் பெற்று அரச அச்சகக் கூட்டுத்தாபனம் மற்றும் உள்நாட்டு விநியோகஸ்தர்களால் அச்சிடப்பட்ட பாடசாலைப் பாடப்புத்தகங்களை விநியோகிக்கும் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் அவை உத்தியோகபூர்வமாக இதன் போது விநியோகிக்கப்பட்டன.

Leave a Reply