மட்டக்களப்பு நகருக்குள் செல்லும் பிரதான பாலங்களில் ஒன்றான புதுப்பாலம் அண்மையில் இடிந்து வீழ்ந்ததைத் தொடர்ந்து அமைக்கப்பட்ட தற்காலிக பெய்லி பாலம் இன்று (10) பொதுமக்களின் பாவனைக்காக திறந்துவைக்கப்பட்டது.
குறித்த பாலம் உடைந்து வீழ்ந்ததையடுத்து, தற்காலிக பாலம் அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. இதன்போது, மட்டக்களப்பு மாவட்ட தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு, இந்த விடயம் தொடர்பில் அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து, வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் ஊடாக உடனடியாக பெய்லி பாலம் ஒன்று அனுப்பிவைக்கப்பட்டதுடன், தற்காலிக வீதியை அமைக்கும் பணிகளை வீதி அபிவிருத்தித் திணைக்களம் முன்னெடுத்தது.
இந்நிலையில், குறித்த பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து இன்று தற்காலிக பாலம் மக்கள் பாவனைக்காக திறந்துவைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் வீதி அபிவிருத்தித் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட பிரதம பொறியியலாளர் நட.கதீசன், நிறைவேற்று பணிப்பாளர் சு.கிருஸாந்தன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
பாலம் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து பெருமளவான மக்கள் குறித்த பாலத்தின் ஊடாக பயணித்ததை காணமுடிந்தது.
எனினும், இது தற்காலிக பாலம் என்பதால் குறித்த வீதியில் கனரக வாகனங்களின் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தித் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.










