மக்களுக்காக செயற்படும் ஊடகவியலாளர்களை விசாரணைக்குட்படுத்துவது கண்டிக்கத்தக்கது! செல்வம் எம்.பி.

மக்களுக்காக செயற்பட்டுவரும் ஊடகவியலாளர்கள் தொடர்ந்தும் பயங்கரவாத விசாரணை பிரிவினரால் விசாரணைக்குட்படுத்தப்படுது கண்டிக்கத்தக்கது என வன்னி நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

வவுனியா ஊடகவியலாளர் நவரத்தினம் கபிலநாத் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப்பிரிவினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் அவரால் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும், அண்மைக்காலமாக வடகிழக்கு உட்பட அனைத்துப் பகுதியிலும் ஊடகத்துறையினரை அச்சுறுத்தும் வகையில் அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது.

தனது புலனாய்வாளர்களை வைத்து மக்களுக்காக குரல்கொடுத்தும் தம்மாலான பணிகளை செய்துவரும் ஊடகத்துறையினரை உள ரீதியாக தாக்கத்திற்குள்ளாக்கும் செயற்பாட்டை முன்னெடுத்துள்ள அரசாங்கம் அதற்காக பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப்பிரிவை பயன்படுத்துக்கின்றது.

வவுனியாவில் ஊடகத்துறையில் நீண்ட காலமாக செயற்பட்டு வரும் சிரேஸ்ட ஊடகவியலாளர் ந. கபிலநாத் ஊடகப்பணிக்கு அப்பால் தமிழ் மக்களின் தொல்லியல் தொடர்பான தேடல்கொண்ட ஒருவராகவும் மக்களின் வறுமையை போக்கவும் பல்வேறு உதவிகளை வழங்கி வருபவர்.

இவ்வாறு சமூக சிந்தனைகொண்ட ஊடகத்துறை சார்ந்தவர்களைத் தொடர்ந்தும் அச்சுறுத்தும் வகையில் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் விசாரணைக்குட்படுத்துவதை எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ள முடியாது.

இலங்கையில் நடந்த ஊடகத்துறையினர் மீதானதும், ஊடக நிறுவனங்கள் மீதானதுமான தாக்குல்கள் மற்றும் அநீதிகளுக்கு இது வரை பொறுப்பு கூற முடியாத அரசு ஊடகத்துறையினரை மௌனிக்க செய்யும் செயற்பாட்டையே தொடர்ந்தும் முன்னெடுக்கின்றது.

எனவே, அரசாங்கம் தமது இயலாமையின் உச்சமாக ஊடகத்துறையினர் மீதும் தனது அழுத்தத்தை பிரயோகிப்பது ஜனநாயகத்தின் மீதான சந்தேகத்தை எழுப்புகின்றது என தெரிவித்துள்ளார்.

என்மீது வைத்த நம்பிக்கையை மீறமாட்டேன்: விவசாயிகளிடம் ஜனாதிபதி உறுதி!

Leave a Reply