ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்சவுக்கு எதிராக ஸ்கொட்லன்டில் புலம்பெயர் தமிழர்கள் எதிர்வரும் திங்களன்று பாரிய கண்டனப்போராட்டத்தை நடத்தவுள்ள நிலையில், அதற்குரிய முன்னோடி பரப்புரைகள் அடுத்தடுத்து வித்தியாசமாக நடத்தப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், ஸ்கொட்லாந்தில் உள்ள முக்கியமாக கட்டடங்களில் கோட்டாபாய ராஜபக்சவுக்கு எதிராகவும், இலங்கை அரசாங்கத்துக்கு எதிராகவும், மின்னொளி பரப்புரைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதால் இலங்கை அரசாங்கம் அதிர்ச்சியடைந்துள்ளது.
ஸ்கொட்லண்டை தளமாககொண்டு வெளிவரும் முக்கிய பத்திரிகைகளில், தமிழ்மக்கள் மீது இனப்படுகொலை செய்த போர் குற்றவாளி ஒருவர் ஸ்கொட்லாந்து வருவதாக ஆக்கங்கள் வெளிவந்திருந்தன.
இந்நிலையில், நேற்றிரவு முதல் ஸ்கொட்லாந்தில் உள்ள முக்கியமாக கட்டடங்களில் ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்சவுக்கு எதிராகவும் சிறிலங்கா அரசாங்கத்துக்கும் எதிராகவும் ‘சீரொளி’ மூலம் பரப்புரைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பிரித்தானிய தமிழ்மக்களின் இந்த நகர்வுகள் லண்டனில் இலங்கைத் தூதரகத்துக்கு அதிரச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழர்களின் கிளாஸ்கோ ஒன்றுகூடலை தடுக்கும் வகையில் தற்போது லண்டனில் தங்கியுள்ள இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிசும், லண்டனில் உள்ள இலங்கைத் தூதரகமும் கடும் பிரயத்தனங்களை எடுத்துவரும் நிலையில் இந்த மின்னொளி பரப்புரைகள் இடம்பெற்றுள்ளது.
இவ்வாறான முன்னோட்டப்பரப்புரைகளால் உற்சாகம் அடைந்துள்ள புலம்பெயர் தமிழர்கள் எதிர்வரும் திங்களன்று அதிகளவில் கிளாஸ்கோ நகரில் ஒன்று கூடுவார்களென எதிர்பார்க்கப்படுகிறது.
லண்டனில் தற்போது தங்கியுள்ள இலங்கை வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு ஆதரவான ஒரிரு தமிழ் அமைப்புக்களுடன் இரகசிய தொடர்பாடலை நடத்தியுள்ளதாகவும் தெரியவருகிறது.










