மாத்தறை புதிய நீதிமன்ற வளாகம் மற்றும் வலஸ்முல்ல மாவட்ட நீதிமன்ற கட்டட திறப்பு விழாவில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ இன்று அலரி மாளிகையிலிருந்து ஸும் தொழில்நுட்பம் ஊடாக இணைந்து கொண்டார்.
மாத்தறை கொடவில பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட நீதிமன்ற வளாகத்தை, அலரி மாளிகையிலிருந்து இணைய தொழில்நுட்பம் ஊடாக பிரதமர் அதன் நினைவு பலகையை திறந்துவைத்தார்.
1,286.5 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட மாத்தறை புதிய நீதிமன்ற வளாகம், சிவில் மேன்முறையீட்டு நீதிமன்றம், ஒரு உயர் நீதிமன்றம், நான்கு மாவட்ட நீதிமன்றங்கள், இரண்டு நீதிவான் நீதிமன்றங்கள் மற்றும் ஒரு தொழிலாளர் தீர்ப்பாயம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
நீதிமன்ற வளாக திறப்பு விழாவுடன், சட்டத்தரணிகள் சங்க கட்டடத்தை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டு விழாவும் இடம்பெற்றது.
அத்துடன், இன்று திறந்துவைக்கப்பட்ட வலஸ்முல்ல மாவட்ட நீதிவான் நீதிமன்ற கட்டடத்தை நிர்மாணிப்பதற்காக அரசாங்கம் செலவிட்ட தொகை 66.7 மில்லியன் ரூபாயாகும்.
மாத்தறை நீதிமன்ற திறப்பு விழாவில் சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன, நீதி அமைச்சர் அலி சப்ரி, வெகுசன ஊடக அமைச்சர் டலஸ் அழகப்பெரும, இராஜாங்க அமைச்சர் காஞ்சன வீரசேகர, நாடாளுமன்ற உறுப்பினர்களான நிபுன ரணவக்க, வீரசுமன வீரசிங்க, கருணாதாச கொடிதுவக்கு, நீதி அமைச்சின் செயலாளர் மு.மாயாதுன்ன மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் மாத்தறை சட்டத்தரணிகள் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.






