கொழும்பு, நீர்கொழும்பு பிரதான வீதியில் வெலிசர, பொது மயானத்துக்கு அருகில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், நால்வர் காயமடைந்துள்ளனர்.
கொழும்பிலிருந்து நீர்கொழும்பு திசையாகப் பயணித்த அதிசொகுசு கார் ஒன்று, வீதியை விட்டு விலகி, எதிர்திசையில் பயணித்த இரு மோட்டார் சைக்கிள்களையும், முச்சக்கரவண்டி ஒன்றையும் மோதியுள்ளது.
பதினாறு வயதான இளைஞர் ஒருவர் செலுத்திய சொகுசு மகிழுந்து ஒன்றே இந்த விபத்தை ஏற்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வேகக் கட்டுப்பாட்டை இழந்ததால் குறித்த மகிழுந்து வீதியை விட்டு விலகி விபத்தை ஏற்படுத்தியதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
சம்பவத்தில், உந்துருளியொன்றில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ள அதேவேளை, அவருடன் பயணித்த மற்றுமொருவர் பலத்த காயமடைந்த நிலையில் ராகம போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன், ஏனைய வாகனங்களில் பயணித்த மூவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பில், மஹபாகே பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.








