13 ஆவது திருத்தச் சட்டம் தமிழர்களைப் பாதுகாக்காது: தமிழ் கட்சிகள் எம்மை ஏமாற்றுகின்றன!! காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தெரிவிப்பு

13 ஆவது திருத்தச் சட்டம் ஒற்றையாட்சி அரசின் கீழ் உள்ளது, அது தமிழர்களைப் பாதுகாக்காது. இந்த தமிழ் கட்சிகள் தாம் ஆட்சியில் அமர்வதற்காக எம்மை ஏமாற்றுகின்றன என காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் தீபாவளி தினமான இன்று 1,722 ஆவது நாளாக ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது அவர்கள் கருத்து தெரிவிக்கையில்,

இன்று நரகாசுரனை வதம் செய்த தீபாவளி திருநாள். ஆனால், இன்று நம்மைச் சுற்றி நரகாசுரன்கள் பலர் இருக்கிறார்கள்.

ஐசிசி தமிழர்களின் இனப்படுகொலை வழக்கை பரிசீலித்து வருகின்ற இந்நேரத்தில், தமிழர்கள் சரியான நேரத்திற்காக காத்திருக்க வேண்டும். இனப்படு கொலையாளிகள் மீது சர்வதேச குற்றங்கள் சுமத்தப்படும்போது, பாதிக்கப்பட்டவர்கள் தாங்கள் விரும்பியவாறு அரசியல் உரிமைகளை கோர முடிந்தது.

தென் சூடான், கிழக்கு திமோர், போஸ்னியா மற்றும் இனப்போர் நடந்த பிற நாடுகளில் இவைகள் நடந்தன. சி.வி.விக்னேஸ்வரன் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் சர்வஜன வாக்கெடுப்பு கோரினார். இப்போது சர்வஜன வாக்கெடுப்பை கைவிட்டு சமஸ்டி நிலை கேட்கிறார். தமிழர்களை குழப்ப வேண்டாம் என்று அவரை கேட்டுக்கொள்கிறோம்.

அரசியல் தீர்வுக்கான வாக்கெடுப்பு என்ற தேர்தல் வாக்குறுதியுடன் அவர் நிலைத்திருக்க வேண்டும். இனப்படுகொலைகள் மீண்டும் நிகழாமல் தமிழர்களைப் பாதுகாப்பது தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களின் கடமை.

யாழ்ப்பாணத்தில் கட்சிகள் ஒன்று கூடி 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்துமாறு இந்தியாவை வலியுறுத்தினர். கடந்த 34 ஆண்டுகளாக இலங்கையின் 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்துமாறு இந்தியா இலங்கையை வற்புறுத்தவில்லை என்பதை இந்தக் கட்சிகள் அறிந்து கொள்ள வேண்டும். இலங்கையை 13ஐ நடைமுறைப்படுத்துமாறு இந்தியா ஒருபோதும் வற்புறுத்தாது.

1987 இல் இந்த 13 ஆவது திருத்தம் அமிர்தலிங்கம் மற்றும் சம்பந்தரால் நிராகரிக்கப்பட்டது. 13ஏ சட்டமூலமும் மாகாண சபை சட்டமூலமும் தமிழ் மக்களின் அபிலாசைகளை பூர்த்தி செய்யவில்லை என்பதே அவர்கள் கூறிய காரணம்.

13 ஆவது திருத்தம் ஒற்றையாட்சி அரசின் கீழ் உள்ளது, அது தமிழர்களைப் பாதுகாக்காது. இந்த தமிழ் கட்சிகள் தாம் ஆட்சியில் அமர்வதற்காக எம்மை ஏமாற்றுகின்றன அல்லது மீண்டும் ஆட்சியைப் பிடிக்க முயற்சிக்கின்றன. 13 ஆவது திருத்தம் தமிழர்களை மேலும் பாதிப்படையச் செய்யும்.

இந்த அரசியல்வாதிகள் இந்தியா, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ஐ.நா. ஆகிய நாடுகளுக்குத், தமிழர்கள் தம்மைப் பாதுகாத்துக் கொள்ளக்கூடிய ஒரே வழி, மீளப்பெற முடியாத பாதுகாப்பான மற்றும் பாதுகாக்கப்பட்ட வடக்கு கிழக்கு இணைந்த தமிழர் தாயகம் தேவை என கேட்க வேண்டும்.

13ஐ சிங்கள அடக்குமுறை மற்றும் ஆக்கிரமிப்பிலிருந்து எம்மைப் பாதுகாக்காது என்பதை இந்த கட்சிகளுக்கு சொல்ல விரும்புகின்றோம் என்றனர்.

Leave a Reply