இலங்கை பொலிஸார் தொடர்பில் விசாரணை கோரும் ஐக்கிய நாடுகளின் அதிகாரி!

இலங்கை அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் சித்திரவதைகள் நிரூபிக்கப்பட்டால், ஸ்கொட்லாந்து பொலிஸார், இலங்கையின் பொலிஸ் துறையினருக்கு பயிற்சியளிப்பதை நிறுத்தவேண்டும் என்று ஐக்கிய நாடுகளின் முன்னாள் அதிகாரி ஒருவர் கோரியுள்ளார்.

இலங்கையில் இருந்து தப்பிச்செல்கின்றவர்களால் சுமத்தப்படுகின்ற, குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலேயே ஐக்கிய நாடுகளின் முன்னாள் மனித உரிமை சிறப்பு அறிக்கையாளர் பேராசிரியர் மேன்ப்ரட் நொவெக் இந்த கருத்தை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையில் இருந்து தப்பிச்செல்லும் ஏதிலிகளால் சுமத்தப்படுகின்ற குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்படவேண்டும்.

இந்த விசாரணைகளின்போது குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால், ஸ்கொட்லாந்தின் தேசியப் படை, இலங்கை பொலிஸ் மற்றும் சிறப்புப் பிரிவுகளின் சர்ச்சைக்குரிய பயிற்சியை நிறுத்த வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்கொட்லாந்தின் சர்வதேசக் பொலிஸ் பயிற்சி உலகக் காவல்துறையை மேம்படுத்துவதில் முக்கியத்துவம் பெறுகிறது.

எனினும், சிறுபான்மைத் தமிழர்களின் சித்திரவதை, கடத்தல் மற்றும் கொலைகளுக்கு உதவுகின்ற, கொழும்பு அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஸ்கொட்லாந்து நாடாளுமன்றம் விசாரணை நடத்த வேண்டும்

அத்துடன், ஸ்கொட்லாந்து பொலிஸ்துறையும், இந்த சித்திரவதைக் குற்றச்சாட்டுகளை விசாரிக்க வேண்டும் என்று அவர் கோரியுள்ளார்.

இலங்கை ஒத்துழைக்கவில்லை என்றால் அல்லது வழக்குத் தொடர முற்படவில்லை என்றால், இந்த விவகாரம் கடந்த காலங்களில் இருந்ததைப் போல சர்வதேச நீதிமன்றங்களுக்கு முன்கொண்டுவரப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply