நுவரெலியா மாவட்ட மக்கள் பிரதிநிதி என்ற வகையில் ஆடையை அணிந்து சமூகத்திற்குள் செல்ல முடியாத நிலைமை தற்போது ஏற்பட்டுள்ளதாக விமல் வீரவங்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
நுவரெலியாவில் நேற்று விவசாய பிரதிநிதிகள் சிலரை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும், காணியில், வயலில் இருக்க வேண்டிய உழவர்கள் தற்போது வீதிக்கு வந்துள்ளனர். வீதியில் இறங்கியுள்ள மக்களின் பின்னணியில் ஜே.வி.பியினர், ஐக்கிய மக்கள் சக்தியினர், ஐக்கிய தேசியக் கட்சியினர் இருப்பதாக அரசாங்கத்தில் உள்ள சிலர் முத்திரை குத்துகின்றனர்.
நுவரெலியா மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் பிரதிநிதி என்ற வகையில் இந்த குற்றச்சாட்டை நான் முற்றாக மறுக்கின்றேன்.
தற்போது ஆடை அணிந்துக்கொண்டு சமூகத்திற்குள் செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. வைபவம் ஒன்றுக்கு செல்ல முடியாது மக்கள் விரட்டியடிக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் வேலைத்திட்டம் ஒன்றை திறந்து வைக்க செல்லும் போது விவசாயிகள் இணைத்து எம்மை விரட்டும் நிலைமை உருவாகியுள்ளது.
எதிர்வரும் காலங்களில் எம்மில் எவருக்கும் வீதியில் இறங்கி செல்ல முடியாத நிலைமை உருவாகும் என்பதை அரசாங்கத்தின் தலைவர்களுக்கு கூறி வைக்க விரும்புகிறேன்.
தன்னிச்சையான தீர்மானங்களும், முடிவுகளும் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. சில தீர்மானங்கள் படுகுழியாக மாறுகின்றன.
அரசாங்கம் 69 லட்சம் என்ற மக்களின் ஆணையை புறந்தள்ளி விட்டு செயற்படும் பயணத்தை ஆரம்பித்துள்ளது என்றால், அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வந்தவர்கள் என்ற வகையில் அரசாங்கத்தை குறித்து சிந்திப்பதை விட 69 லட்சம் என்ற மக்களின் நிலைப்பாடுகள் பற்றி சிந்திக்க நேரிடும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.






