தமிழர்களின் தொன்மைகள் திட்டமிட்டு சிங்கள பௌத்த மயப்படுத்தப் படுகிறது! சபா குகதாஸ்

இலங்கை சுதந்திரம் அடைந்த பின்னர் ஆட்சிக்கு வந்த சிங்கள ஆட்சியாளர்கள் திட்டமிட்ட வகையில் தமிழர்களின் தொன்மைகளை பௌத்த சிங்கள மயப்படுத்தி வருகின்றனர் என முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

சிங்கள ஆட்சியாளர்கள் பௌத்தம் என்றால் அது சிங்களவர்களுக்கு மட்டும் என்ற இனவாத நோக்கில் தொன்மையான தமிழ்ப் பௌத்த அடையாளங்களை அதன் வரலாறுகளை சிங்கள பௌத்தமாக சித்தரிக்கும் திட்டமிட்ட இன அழிப்பு சர்வதேச மரபுரிமை நியமங்களை மீறுகின்ற சட்டவிரோத செயற்பாடாகும்.

ஆரம்பங்களில் சிவனெளிபாதமலை, கதிர்காமம், முன்னேஸ்வரம், அனுராதபுர பொலநறுவைக்கால தமிழர் தொன்மைகள் அழிக்கப்பட்டது.

பின்னர் திருகோணமலை , அம்பாறை மாவட்ட தொன்மைகள் மாற்றியமைக்கப்பட்டது.

இலங்கையில் தமிழர்கள் ஆதிக்குடிகள் என்ற வரலாற்றை ஆதாரப்படுத்தும் ஏட்டுச் சுவடிகள் நூல்கள் உள்ளடங்கிய யாழ் பொது நூலகம் திட்டமிட்டு சிங்கள இனவாத ஆட்சியாளர்களால் எரிக்கப்பட்டது.

இவை யாவும் கடந்த காலத்தில் தொடர்ச்சியாக நடந்த தமிழர்களின் தொன்மையான மரபுரிமைகளை அழிக்கும் பௌத்த சிங்கள ஆட்சியாளரின் தமிழின அழிப்பாகும்.

இலங்கைத் தீவில் பல்லின கலாசார தொன்மைகள் காணப்படும் போது தொல்லியல் திணைக்களம் திட்டமிட்ட வகையில் ஓர் இனம் சார்ந்து குறிப்பாக சிங்கள இனம் சார்பாக கலாசார தொன்மைகளை மாற்றியமைத்தல் தமிழர்களின் வரலாற்றுத் தொன்மைகளை இன ரீதியாக அழிக்கின்ற செயற்பாடாகவே நடந்தேறி வருகின்றது.

சிங்கள ஆட்சியாளர் தமிழர்களின் தொல்லியல் மரபுகளை சிங்கள மயப்படுத்தும் செயற்பாட்டை தடுத்து நிறுத்த தமிழர்கள் ஒன்று பட்ட பொறிமுறை ஒன்றை விரைந்து செயற்படுத்த தவறினால் இலங்கைத் தீவும் அதனுடன் இணைந்த தமிழர் தாயகமும் சிங்கள பௌத்த மயமாவதை தடுத்து நிறுத்த முடியாத நிலை உருவாகும்- என்றார்.

Leave a Reply