இலங்கையின் சுற்றுலாத்துறை ஜனவரி முதல் ஒக்டோபர் வரை 130 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஈட்டியுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
பிரான்ஸ் பயண முகவர் நிறுவனங்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் இடையில் பரிஸ் ஷங்ரிலா ஹோட்டலில் நேற்று இரவு இடம்பெற்ற சந்திப்பின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
சுற்றுலாப் பயணிகளுக்கு நாடு திறக்கப்பட்டதிலிருந்து, இன்றுவரை 70,000 க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர்.
எதிர்வரும் காலத்தில் இலங்கைக்கு சுமார் 200,000 சுற்றுலாப் பயணிகள் வருவார்கள் என எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.
அத்துடன், அடுத்த வருடம் இலங்கையின் சுற்றுலாத் துறை மீண்டு உயரும் என நம்பிக்கை வெளியிட்டார்.
குறிப்பாக பிரான்ஸில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை அண்மைக்காலத்தில் பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டார்.
எதிர்காலத்தில் பிரான்ஸில் சுற்றுலா ஊக்குவிப்பு செயற்பாடுகளை விரிவுபடுத்துமாறு மேலும் கூறினார்.






