நானாட்டான் பகுதியில் அமைக்கப்பட்ட தரமற்ற பாலம்: மக்கள் பாவனைக்காக கையளிக்கபட முன்னரே வெடிப்புக்கள்

மன்னார் நானாட்டான் பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட பள்ளங்கோட்டை பகுதியில் அமைக்கப்பட்ட பாலம் தரமின்றி காணப்படுவதாகவும், பாலம் அமைக்கப்பட்ட இடத்தில் இருந்து தாழ் இறங்கியுள்ளதாகவும் பள்ளங்கோட்டை மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்

அரசாங்கத்தின் ஆயிரம் பாலம் திட்டத்தின் கீழ் வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் மேற்பார்வையில் அதிகளவு வெள்ள நீர் ஓட்டம் காணப்படும் பள்ளங்கோட்டை மடுக்கரை பிரதான நுழைவு பகுதியில் அமைக்கப்பட்ட பாலமே மேற்படி தாழ் இறங்கி தரமற்று காணப்படுகின்றது.

அத்துடன், மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட முன்னரே பல வெடிப்புக்கள் தோன்றியுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்

குறித்த பாலம் அமைக்கப்படும் போதே அப்பகுதி மக்களால் உரிய அரச அதிகாரிகள் திணைக்களங்களுக்கு பலம் அமைத்தலில் காணப்படும் குறைபாடுகள் தொடர்பாக முறைப்பாடுகள் வழங்கப்பட்டுள்ளது.

எனினும், அவர்கள் அதை பெரிதுபடுத்தவில்லை எனவும் அவர்களின் அலட்சியத்தால் தற்போது மக்களின் பல லட்சம் வரிப்பணத்தில் கட்டபட்ட பாலம் உடையும் நிலையில் உள்ளதாகவும் தெரிவித்தனர்.

இந்தநிலையில், அப்பாலம் முழுவது உடைந்து உயிர் சேதங்கள் ஏற்பட முன்னர் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் திணைக்களத்தினர் அப்பாலத்தை ஒழுங்கான முறையில் அமைத்து தருமாறு பல்லங்கோட்டை மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

குறித்த விடயம் தொடர்பாக நானாட்டான் பிரதேச செயளாலர் சிறீஸ்கந்தகுமாரை தொடர்பு கொண்ட போது, பள்ளங்கோட்டை பாலம் தொடர்பான பல்வேறு முறைப்பாடுகள் தமக்கு கிடைக்க பெற்றுள்ளதாக தெரிவித்தார்.

குறித்த விடயம் தொடர்பாக தான் மாகாண வீதி அபிவிருத்தி திணைக்கள பணிப்பாளருக்கு தெரியப்படுத்தியுள்ளதாகவும் விரைவில் நடவடிக்கை மேற்கொள்வதாகவும் மேலும் தெரிவித்துள்ளார்

Leave a Reply