கற்பிட்டி பத்தலங்குண்டு, பராமுன தீவுப்பகுதியில் அழுகிய நிலையில் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக கற்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.
பத்தலங்குண்டு பகுதியிலுள்ள கடற்படையினர் நேற்றிரவு ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்ட போது, இவ்வாறு சடலம் ஒன்று கிடப்பதை அவதானித்ததுடன், அதுதொடர்பில் கற்பிட்டி பொலிஸாருக்கும் தகவல் வழங்கியுள்ளனர்.
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு இன்று காலை சென்ற கற்பிட்டி பொலிஸாருடன் இணைந்து தடயவியல் பொலிஸாரும் சடலம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்தனர்.
சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
அத்துடன், சடலம் அடையாளம் காண முடியாதவாறு உருக்குலைந்துள்ளதுடன், உடலின் மேற்பகுதியும் சிதைவடைந்திருப்பதனால், குறித்த உடலின் மேற்பகுதியை உயிரினங்கள் உட்கொண்டிருக்கலாம் என சந்தேகிப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, இன்று மாலை நீதிவான் விசாரணையின் பின்னர் குறித்த சடலம், பிரேத பரிசோதனைக்காக பத்தலங்குண்டு பகுதியிலிருந்து இயந்திரப் படகு மூலம் கற்பிட்டி நகருக்கு எடுத்துச் செல்லப்பட்டு, அங்கிருந்து புத்தளம் தள வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கற்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.






