தேர்தல் பணிக்கு 770 மில்லியன் ரூபா! – நிதி அமைச்சிடம் விடுக்கப்பட்ட கோரிக்கை

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பணிகளுக்காக 770 மில்லியன் ரூபாவை பெப்ரவரி மாதத்தில் வழங்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு நிதி அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் ஜி புஞ்சிஹேவா, நிதி அமைச்சின் செயலாளரிடம் எழுத்து மூலம் இது தொடர்பான கோரிக்கையை முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மார்ச் 09 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்குத் தேவையான அடிப்படைச் செலவுகளுக்காக பெப்ரவரி மாதத்தில் 770 மில்லியன் தேவைப்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, உரிய தொகையை ஒரேயடியாகவோ அல்லது தவணையாகவோ வழங்க நடவடிக்கை எடுக்குமாறு நிதி அமைச்சின் செயலாளரிடம் தேர்தல்கள் ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.

தேர்தல் செலவினங்களுக்காக தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு நிதியமைச்சு இதற்கு முன்னர் கிட்டத்தட்ட 37 மில்லியன் ரூபாவை வழங்கியுள்ளது.

உள்ளூராட்சி தேர்தல் திகதி வரையிலான காலப்பகுதியில் 04 பில்லியன் ரூபா வரை செலவாகும் என எதிர்பார்க்கப்படுவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Leave a Reply